காயத்ரிக்கு என்னாச்சு.. அடுத்தடுத்த ட்வீட்களால் பாஜகவில் ரணகளம்.. திமுகவுக்கு ஃப்ரீயான "ஆடுகளம்"
சென்னை: பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் அடுத்தடுத்து ட்வீட் போட்டு மறைமுகமாக பாஜக நிர்வாகிகளை விமர்சித்து வருகிறாரே. இவரது கருத்துகளுக்கு சீனியர்களும் எந்த வித கருத்தையும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்களே!
தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையின் ஆதரவாளர்கள் போலி ட்விட்டர் ஐடியை வைத்துக் கொண்டு பாஜகவின் மூத்தத் தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்மையில் மணிப்பூர் ஆளுநர் இல கணேசன், தனது இல்ல விழாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அழைத்திருந்தார். இதற்காக சென்னை வந்த மம்தாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து விமர்சித்த அண்ணாமலை தரப்பினர், மேற்கு வங்கத்தில் மம்தாவின் கொடூர ஆட்சியால் பாஜகவினர் எத்தனை பேர் இறந்தனர் என்பதை மறந்துவிட்டு இல கணேசன், மம்தா பானர்ஜியை விழாவுக்கு அழைத்தது தவறு. இல கணேசன் பாஜகவுக்கு புற்றுநோய் என கடுமையாக விமர்சித்துள்ளனர். இது போல் மூத்த தலைவர்களை பாஜகவினரே கடுமையாக விமர்சித்தாலும் அவர்களை மாநில தலைவர் என்ற முறையில் அண்ணாமலை இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை
அது போல் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் என சொல்லிக் கொள்ளும் அந்த நபர்கள் காயத்ரி ரகுராமையும் விமர்சித்து வருகிறார்கள். மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சை கேட்டு இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் போய் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு கொரியோகிராப் செய்யுங்கள் காயத்ரியின் பெயரை குறிப்பிடாமல் விமர்சனம் எழுந்துள்ளது.

பதவி பறிப்பு
ஏற்கெனவே தனது பதவியை பறித்தது, காசி தமிழ் சங்கமத்திற்கு தன்னை அனுமதிக்காதது உள்ளிட்ட பிரச்சினைகளால் மாநில தலைவர் மீது கடுங்கோபத்தில் இருக்கும் காயத்ரி, அண்ணாமலை ஆதரவாளர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். அது போல் அண்ணாமலையின் பெயரை சொல்லாமல் ஒரு ட்வீட் போட்டு அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

நீலகிரி மாவட்டம்
இதுகுறித்த ஒரு ட்வீட்டில், காயத்ரி, "நீலகிரி மாவட்டம் ஒரு காலத்தில் பாஜக வெற்றி பெற்ற தொகுதியாக இருந்தது. கடந்த தேர்தலின்போதும் பாஜக வெற்றி பெறும் வித்தியாசத்தில் இருந்தது. ஆனால் சிலர் கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் பாஜக உருவானது போலவும் சித்தரிக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் வளர்ச்சி அடைந்துள்ளது போலவும் பேசுகின்றனர். ஏன் இப்படி தவறான செய்தி அனுமதிக்கப்படுகிறது? கடந்த காலத்தில் வெற்றி பெற்ற மற்ற தலைவர்களின் கடின உழைப்பு புதைக்கப்படக்கூடாது. மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள். அதிகாரப்பூர்வமற்ற ஆதரவாளர்கள் தவறான செய்தியை தெரிவிக்கின்றனர். நீலகிரி எப்போதும் பாஜக வலுவான பகுதியாகும் என தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை ஆர்ப்பாட்டம்
அதாவது நீலகிரி மாவட்டத்தில் அண்ணாமலை ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார். அங்கு பெருமளவில் கூட்டத்தை கூட்டியிருந்தார். திமுகவின் எம்பி தொகுதியான நீலகிரி மாவட்டத்தில் பாஜக சார்பில் அண்ணாமலை ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டான்டீ தேயிலை தொழிலாளர்களை கூட்டினார். முதல்வர் ஸ்டாலின் குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். டான்டீயை நடத்த முடியவில்லை என்றால் மத்திய அரசிடம் கொடுத்துவிடுங்கள் என்றார்.

நீலகிரி வருகை
அண்ணாமலையின் நீலகிரியின் வருகை வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என அவரது ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இதை கண்டித்துத்தான் காயத்ரி மேற்கண்டவாறு ட்வீட் போட்டிருக்கிறார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். தற்போது ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவர் எந்த சீனியரையும் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது மேலிடத்திற்கும் சென்றுள்ளது. ஆனாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீலகிரி மாவட்டத்தில் அதிமுக கொடி கட்டி பறந்த நிலையில் அங்கு பாஜகவும் வளர தொடங்கியது. இதை கண்ட திமுக அதன் வளர்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதற்காக அங்கு பெரம்பலூர் தொகுதி எம்பியாக இருந்த ஆ ராசாவை நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தது. அவரும் தினந்தோறும் மலைவாழ் மக்கள், பழங்குடியினத்தவர் உள்ளிட்டோரை சந்தித்து திமுகவை அந்த தொகுதியில் வளர்த்தெடுத்துவிட்டார். இதனால் திமுகவிற்கு செக் வைக்க பாஜக டான் டீ விவகாரத்தை கையில் எடுத்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நீலகிரியில் நடத்துவதற்கு பாஜக முடிவு செய்து அந்த ஆர்ப்பாட்டத்திற்கு நல்லதொரு பலனும் கிடைத்தது. இந்த நிலையில் காயத்ரி ரகுராம் அடுத்தடுத்து ட்வீட் போட்டு கட்சியில் நடக்கும் பிரச்சினைகளை வெளியே சொல்வதால் பாஜகவுக்குத்தான் அது பிரச்சினையாக முடியும். ஏற்கெனவே காசு கொடுத்து ட்வீட்டுகளுக்கு லைக், ஷேர் கொடுக்க சொல்லியிருப்பதாக ஒரு புகாரை அண்ணாமலை டீம் மீது காயத்ரி கிளப்பியுள்ளார். இப்படி பதிலடி கொடுக்கிறேன் என்ற பெயரில் பாஜகவை அவர் சந்தி சிரிக்க வைப்பதாகவே நெட்டிசன்கள் கருதுகிறார்கள்.

காயத்ரி
காயத்ரிக்கு என்ன பிரச்சினையோ அதை தனியாக பேசி தீர்த்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு இப்படி எடக்கு மடக்காக செய்தால் அது காயத்ரியின் வளர்ச்சிக்குத்தான் பின்னடைவே தவிர! அவர் குற்றச்சாட்டு வைக்கும் நபருக்கு அல்ல! வீட்டு பிரச்சினையை எப்படி ரோட்டில் பேசக் கூடாதோ அது போல் கட்சி பிரச்சினையை பொதுவெளியில் பேசக் கூடாது. அவ்வாறு பேசுவது திமுகவுக்குத்தான் சாதகமாக அமையும், மேலும் காயத்ரியை மூத்த தலைவர்கள் யாருமே கண்டனம் தெரிவிக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications