"மாணவி மரணம்.. எதிர்க்கட்சியாக இருக்கும்போது கொந்தளித்தீர்கள்.. இப்போது அமைதி ஏன்?" காயத்ரி ரகுராம்
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் திமுக அரசைக் கடுமையாகச் சாடி உள்ளார்.
Recommended Video
காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் காஞ்சிபுரத்திலுள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் கலந்துகொண்டார்.

பாஜக
கட்சியை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்தும் திமுக ஆட்சியில் நடந்துள்ள ஊழல் குறித்தும் மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறப்பட்டது. மேலும், பொது மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும், குன்றத்தூர் பகுதியில் அமைந்துள்ள அமர் ஆதி ஈஸ்வரர் மற்றும் ராம நாரீஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான 250 கோடி மதிப்புள்ள நிலத்தில் உள்ள குடியிருப்புகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி திருக்கோயிலுக்கு வருவாய் ஏற்படுத்த இந்து சமய அறநிலையத்துறை முயற்சி மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

காயத்ரி ரகுராம்
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் நடிகை காயத்ரி ரகுராம், "கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மாணவி உயிரிழப்பு சம்பவத்தில் உண்மைத் தன்மையைக் கண்டறியத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்.

அமைதி ஏன்
கடந்த காலங்களில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பாலியல் விவகாரங்கள், மர்ம மரணங்களுக்கு பல்வேறு நாடகங்களை நடத்திய கனிமொழி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து கருத்து கூட தெரிவிக்கவில்லை. அவரது குடும்பங்களுக்கு ஆதரவையும் தெரிவிக்கவும் இல்லை. இது ஏன் என்று தெரியவில்லை.

சிபிசிஐடி விசாரணை
இவ்விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை ஒன்றே தமிழக பாஜகவின் முக்கிய கோரிக்கை. பொதுமக்கள் அமைதியான முறையில் வன்முறை இல்லாமல் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும். போலீசார் மீது தாக்குதல் நடத்துவது, பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. உடனடியாக தமிழக முதல்வர் மாணவியின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் கனியாமூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் மாணவி ஒருவர், கடந்த ஜூலை 13ஆம் தேதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதில் சந்தேகம் கொண்ட மாணவியின் பெற்றோர்கள் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்று அந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications