"திமுக வயிற்றில் அடிக்கிறது.. உதயநிதிக்கு விநாயகர் மண் பொம்மை.. ஆனால்".. காயத்ரி ரகுராம் காட்டம்
பாஜகவின் காயத்ரி ரகுராம் திமுகவை விமர்சித்துள்ளார்
சென்னை: "விநாயகர் சதுர்த்தி, உதயநிதிக்கு வெறும் ஒரு மண் பொம்மையாக இருக்கலாம்.... ஆனால், ஒவ்வொரு ஹிந்துகளும் நம்பும் கலாசாரம், பண்பாடு, உணர்வு... இந்துக்களின் ஒற்றுமையை உடைத்து அவர்களின் மனநிலையை கெடுக்க திமுக முயல்கிறது" என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது... 3வது அலை வரக்கூடிய சூழல் உள்ளதாக எச்சரிக்கை ஏற்கனவே உள்ளது..
எனவே, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், எதிர்வரும் காலம் பண்டிகை காலம் என்பதால் மக்கள் பண்டிகைகளின் மூலம் கூட்டம் கூடுவதை கூட தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.

பாஜக
இப்படிப்பட்ட சூழலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைக்கவோ, பின்னர் அதை கூட்டமாக சென்று கடலில் கரைப்பது போன்ற நடவடிக்கைகள் கூடாது என அரசு தடை விதித்துள்ளது.. ஆனால், வீட்டிலேயே சிலை வைத்து தனிமனிதராக வழிபாடு செய்து பிறகு, தனி நபராக அந்த சிலையை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி உண்டு என்றும் தெரிவித்துள்ளது.

அண்ணாமலை
ஆனால், இதை இந்து அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.. இந்து முன்னணியினர் இதற்காக ஒரு ஆர்ப்பாட்டமே நடத்தினர்.. எத்தனை தடைகள் போட்டாலும், திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும் என்று அர்ஜூன் சம்பத் அறிவித்துவிட்டார்.. அதேபோல, ஒட்டுமொத்தமாக விநாயகர் சதுர்த்தி விழா நடத்தக் கூடாது என்பதை ஏற்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் எச்சரித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த தடைக்குப் பதிலாக கட்டுப்பாடு விதிக்கலாம் என்று பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தமும் தெரிவித்துள்ளார்... அரசின் தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான எதிர்ப்புகள் மற்றொரு புறம் கூடி வருகிறது.

காயத்ரி ரகுராம்
இந்நிலையில் பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராமும் திமுக அரசை விமர்சித்து உள்ளார்.. இதுகுறித்து அவர் கூறும்போது, "விநாயகர் சதுர்த்தி, உதயநிதிக்கு வெறும் ஒரு மண் பொம்மையாக இருக்கலாம்.... ஆனால், ஒவ்வொரு ஹிந்துகளும் நம்பும் கலாசாரம், பண்பாடு, உணர்வு... அதனால் ஒற்றுமையுடன், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறோம். கோடிக்கணக்கான தமிழ் மக்களை காயப்படுத்த, தீய கொள்கையை மக்களிடம் திமுக திணிக்கிறது.

பாதிப்பு
அரசின் நடவடிக்கை, விநாயகர் சிலைகளை செய்பவர்களையும், கொண்டாடும் பல கலைஞர்களையும் வெகுவாக பாதிக்கிறது... இது, அவர்களின் வயிற்றில் அடிப்பது போல உள்ளது.. இந்துக்களின் ஒற்றுமையை உடைத்து அவர்களின் மனநிலையை கெடுக்க திமுக முயல்கிறது... டாஸ்மாக் கடை, பஸ், பள்ளிகள், தியேட்டர்கள் மற்றும் பிற பொது இடங்கள் திறக்கப்படும்போது, விநாயகர் சதுர்த்தியை மட்டும் தடை செய்வது ஏன்?" என்று காயத்ரி கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications