திமுக & அதிமுகவில் இருந்து.. பலரும் பாஜகவில் சேரப்போறாங்களாம்.. சொல்கிறார் பாஜக சீனிவாசன்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மொத்தம் 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தனித்துப் போட்டி
தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியான உடனேயே அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கின. இதில் தற்போது பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடர்ந்த நிலையில், இப்போது அந்தக் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. இரு கட்சிகளும் தனித்தனியாகத் தேர்தலை எதிர்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிமுக பிரமுகர்
இதனிடையே மதுரை மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.எஸ்.காலணி 61வது வார்டில் கடந்த 2011ல் நடைபெற்ற மாநகர் மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் லட்சுமி. தற்பொழுது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சி 61வது வார்டில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளித்த நிலையில், இன்று வெளியிடப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் லட்சுமியின் பெயர் இடம் பெறவில்லை.

வரலாற்று சிறப்பு மிக்க முடிவு
இதனால் அதிருப்தி அடைந்த அவர், பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் சரவணன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், "வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை பாஜக தலைவர் அறிவித்துள்ளார். இந்த முடிவைத் தான் தமிழகம் எதிர்பார்த்துக் காத்திருந்தது. தொண்டர்களின் உணர்வைப் புரிந்து கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பலரும் தயார்
தனித்துப் போட்டியிடும் முடிவை பாஜக தொண்டர்கள் வரவேற்கின்றனர். இதன் மூலம் அதிக இடங்களில் எங்களால் போட்டியிட முடியும். பாஜகவின் பலம் எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதைத் தமிழகம் அறிய வேண்டும் என்பதற்கான தேர்தலாக இந்த தேர்தல் அமையும். எங்களுக்கு எப்பொழுதும் பொது எதிரி திமுகதான். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பாஜக பெறும் . அதிமுகவில் மட்டுமல்ல திமுகவில் இருந்தும் பாஜகவில் இணையப் பலரும் தயாராக உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications