பாஜக குண்டர்கள்.. செய்தியாளர்களை தாக்கிய கும்பல்.. "தொடர்கதையாகிவிட்டது".. ஊடகவியலாளர் மையம் கண்டனம்
சென்னை: சென்னையில் பத்திரிகையாளர்கள்/ செய்தியாளர்களை பாஜகவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவினரின் செயலுக்கு எதிராக மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் செய்தியாளர்களை பாஜகவினர் விமர்சனம் செய்வது அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றின் போது பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.

பிரதமர் மோடியின் வருகையின் போது சாலை நடுவே கொடி கம்பங்களை நட்டது ஏன் என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை கோபமாக பதில் அளித்தார். செய்தியாளர்களுக்கு பதில் அளிக்காமல்... அண்ணாமலை அந்த செய்தியாளர்களை தாக்கி பேசினார்.
உங்களுக்கு அறிவாலயத்தில் இருந்து வர வேண்டிய 200 ரூபாய் வந்துவிடும் என்று அண்ணாமலை விமர்சனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர் கேள்வி எழுப்ப எழுப்ப.. உங்களுக்கு 1000 ரூபாய் வந்துவிடும்.. 2000 ரூபாய் வந்துவிடும் என்று கூறிக்கொண்டே சென்றார் அண்ணாமலை. அண்ணாமலையின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் பல பத்திரிகையாளர்கள் அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்தனர்.

அண்ணாமலையின் பேச்சுக்கு எதிராக மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங்களை மேற்கொண்டது. இதையடுத்து சமீபத்தில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை மோசமாக தாக்கி பேசினார்.
இன்று கூட செய்தியாளர்களிடம் எச். ராஜா 10 நிமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரிய சர்ச்சையானது.

இன்று செய்தியாளர்களை பார்த்து கோபமாக பேசிய எச். ராஜா. நீங்கள் எல்லாம் இந்து விரோதிகள். சம்பளம் கொடுக்கும் முதலாளிகள் இந்து விரோதிகளாக இருக்கிறார்களா என்பதற்காக நீங்கள் இந்து விரோதிகளாக இருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் இந்துக்களுக்கு எதிரானவர்கள். நீங்கள் திட்டமிட்டு இந்துவுக்கு எதிராக பேசுகிறீர்கள்.
இந்துவிற்கு எதிராகத்தான் பேச வேண்டும் என்று திட்டமிட்டு நீங்கள் பேசுகிறீர்கள். எனக்கு என்ன பிரச்சனை என்றால் நீங்கள் எல்லாம் உண்மைகளை படிப்பதே இல்லை. கால்டுவெல் எதையோ எழுதி வைத்து இருக்கிறான் என்று அதை படித்தீர்கள். நீங்கள் யாருமே படிக்கிறதே இல்லை., என்று கடுமையாக திட்டினார்.
இந்த நிலையில் தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியும் சர்ச்சையாகி உள்ளது. அமெரிக்கா சென்றுவிட்டு அண்ணாமலை சென்னை திரும்பிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த பேட்டிக்கு பின்பாக அங்கு இருந்த பெண் நிர்வாகி ஒருவர் மயக்கம் அடைந்து விழுந்தார். இதை புகைபடம் எடுப்பதற்கு முயன்ற செய்தியாளர்களை பாஜகவினர் தாக்கினர்.
ஏய் போ போ என்று கூறி மோசமாக தாக்குதல் நடத்தினர். பத்திரிகையாளர்களை பார்த்து சில பாஜகவினர் கொச்சையான வார்த்தைகளை பேசினார். இந்த நிலையில் பாஜகவினரின் செயலுக்கு எதிராக மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள கண்டனத்தில், பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை தாக்க முயன்று, கீழ்த்தரமாக பேசிய பாஜக குண்டர்களை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்கதையாகியுள்ள இந்தப்போக்கு நிறுத்தப்பட வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை தற்போதைய & முந்தைய நிகழ்வுகளில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று விமர்சனம் வைத்துள்ளனர்.
இதற்கு முன் செய்தியாளர்களை பாஜகவினர் மோசமாக நடத்திய வீடியோக்களையும் அந்த அமைப்பு பகிர்ந்து உள்ளது.
இந்த சம்பவத்திற்கு அண்ணாமலை தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற நிர்வாகிகள் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் சார்பாக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். தவறிழைத்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications