வக்ஃபு வாரியத் திருத்த மசோதாவை கைவிடுங்கள்.. இஸ்லாமியர்களின் அச்சம் நியாயமானது.. எடப்பாடி பழனிசாமி!
சென்னை: நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்த கூட்டத் தொடரில் வக்ஃபு வாரியம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாத இருவரை உறுப்பினராக இடம்பெற செய்வது உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருந்தன.
அதேபோல் வாரிய நிலங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டாய பதிவு செய்வது, வக்ஃபு நிலமா, இல்லையா என்பதை முடிவு செய்ய நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட மாற்றங்களும் இடம்பெற்றிருந்தன. இதன் காரணமாக தொடக்கம் முதலே வக்ஃபு வாரிய மசோதாவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

இந்த நிலையில் வக்ஃபு வாரிய மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த ஆ.ராசா, கல்யாண் பானர்ஜி உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர். இதனிடையே கூட்டுக் குழுவின ஆலோசனையின் போது, எதிர்க்கட்சிகளின் கருத்துகள் பெரிதாக கேட்கப்படவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
அதுமட்டுமல்லாமல் ஒரே இரவில் 655 பக்கங்கள் கொண்ட வக்ஃபு வாரிய மசோதாவுக்கான வரைவு அறிக்கையை படித்து, கருத்துகள் கூற வேண்டும் என்று கூட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாளை தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்ற பாஜக மும்முரமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த வக்ஃபு வாரிய மசோதா தொடர்பாக தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இதுவரை எந்தக் கருத்தையும் கூறவில்லை. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், வக்ஃபு சட்டத் திருத்த மசோதா தொடர்பாக திருத்தங்களை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு பல்வேறு தரப்பினர் முன்வைத்த பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு, அவசர அவசரமாக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல.
வக்ஃபு வாரிய சொத்துக்கள் என்பது இஸ்லாமியப் பெரியவர்கள் அந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், இறை இல்லங்களை எழுப்பி வழிபாடு செய்வதற்காகவும், சமூக நலத் தொண்டுகளுக்காகவும் இறைவனுக்காக கொடுக்கப்பட்ட அர்ப்பணிப்பு சொத்துக்களாகும். இந்த சொத்துக்களை பயன்படுத்தும் முழு உரிமையும் இஸ்லாமிய சமூகத்தவர்களுக்கு மட்டுமே உண்டு என்றாலும், அதனை தனிப்பட்டவர்கள் உரிமை கூட கொண்டாட எவ்வித அனுமதியும் இல்லை. அதனால், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுவதில்லை.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள வக்ஃபு சொத்துக்கள், வக்ஃபு சட்டம் 1995-ஆல் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு சட்டத் திருத்த மசோதா 2024, வக்ஃபு சொத்துக்கள் மீதான இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், ஆக்கிரமிப்புக்கு துணை போகும் வகையிலும் உள்ளதாகவும், இதனால், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள், அடக்க ஸ்தலங்கள் மீதான உரிமைகளும் பறிபோகும் வாய்ப்புள்ளதாக சிறுபான்மை இஸ்லாமிய சமூக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அதற்கெதிராக நாடு முழுவதும் அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சட்டத் திருத்தம் வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என மத்திய அரசு கூறினாலும், அந்த ஷரத்துக்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளது என்ற இஸ்லாமிய மக்களின் அச்சம் நியாயமானதுதான். எனவே, மத்திய அரசு சிறுபான்மை மக்களின் உணர்வுகளை மதித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications