“தமிழக அரசியல் சூழ்நிலைக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை”.. ஜகா வாங்கிய பாஜக தலைகள்!
சென்னை: "இப்போது தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கும், எங்களுக்கு எந்த ரோலும் இல்லை. நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பிரச்சனையில் தேவையில்லாமல், எங்களுடைய கட்சியை இழுப்பது சரியில்லை. நாங்கள் இதில் தலையிடவே இல்லை" என பாஜக மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். எனவே காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சியிடம் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆதரவு கேட்டது.

இதில் 5 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி, ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தது. இதுதவிர, இடதுசாரிகள் நேற்று ஆதரவு தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை நடத்தி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. முஸ்லீம் லீக் கட்சியும் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே 3 முறை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுநரிடம் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரியும், ஆளுநர் தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க 118 தொகுதிகள் தேவை. ஆனால், அது தவெக-விடம் இல்லை. ஆகையால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை என ஆளுநர் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நான்காவது முறையாக ஆளுநரை சந்தித்தார் விஜய். 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதற்கான கடிதங்களை வழங்கினார் விஜய். இதையடுத்து, தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்க ஒப்புதல் அளித்துள்ளார் ஆளுநர் அர்லேகர்.
முன்னதாக ஆளுநர் ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்காமல் இழுத்தடித்ததன் பின்னணியில் பாஜக இருக்கிறது. அதுவே தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்கிறது என்று பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டுச் சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் இப்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து எங்கள் கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.
இப்போது தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பிரச்சனையில் தேவையில்லாமல் எங்களுடைய கட்சியை இழுப்பது சரியில்லை. நாங்கள் இதில் தலையிடவே இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த முறை அக்கட்சிக்கு 4 எம்.எல்.ஏக்கள் இருந்த நிலையில், தற்போது 1 இடத்தில் மட்டுமே வென்றது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான எந்தவொரு வாய்ப்பினையும் அதிகாரத்தையும் மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தேர்தலில் வழங்கவில்லை என்று கருதுகிறோம். தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும் தேர்தல் முடிவுகளையும் நாங்கள் உளமார மதிக்கிறோம். எனவே தமிழக பாரதிய ஜனதா கட்சியானது, தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை.
ஆட்சி அமைக்கும் எவ்வித முயற்சியிலும் கட்சியானது எவ்வித நேரடிப் பங்களிப்பையும் மேற்கொள்ள விரும்பவில்லை. மேலும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்பதையும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்." எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications