'அந்த பெரிய தவறு'.. தமிழ்நாட்டில் 10-15 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்பை தூக்கி எறிந்த பாஜக, அதிமுக
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட எல்லா தொகுதியிலும் திமுக கூட்டணிதான் வெல்லும் என்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் பாஜக, அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தால் 10 முதல் 15 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்பு இருக்கும் என்கிறது புள்ளி விவரம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்பட கட்சிகள் ஒருங்கிணைந்து மிகப்பெரிய கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

அதிமுகவில் பொறுத்தவரை தேமுதிக மற்றும் எஸ்டிபி, புரட்சி பாரதம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி, புதிய நீதி கட்சி, ஜான் பாண்டியனின் கட்சி, தேவேந்திர யாதவின் கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே உள்ளிட்டவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. முன்னதாக தேர்தலுக்கு முன்பு அதிமுகவும், பாஜகவும் பிரிந்தன. ஒருவேளை அதிமுகவும் பாஜகவும் இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் நிச்சயம் தேர்தல் முடிவுகள் ஓரளவு மாறியிருக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தல் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சொல்வது என்றால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, விருதுநகர், கோவை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, ஆரணி, தருமபுரி, தென்காசி, விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இடங்களில் திமுக-வை விட அதிமுக-பாஜக கூட்டணி வாக்குகள் அதிகமாகும். அதிமுக கூட்டணி அமைந்திருந்தால் தர்மபுரியில் சௌமியா அன்புமணி நிச்சயம் எளிதாக வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு உள்ளது. கோவையிலும் அண்ணாமலை மற்றும் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் சேர்ந்து வாங்கிய வாக்குகள் ஒரே பக்கமாக வந்திருந்தால் அண்ணாமலை வென்றிருக்க வாய்ப்பு உள்ளது.
தென் சென்னை தொகுதியில் தமிழிசை சௌந்திரராஜன் போட்டியிட்ட வைத்து, அதிமுக ஆதரித்து இருந்தால் நிச்சயமாக முடிவுகள் மாறியிருக்க வாய்ப்பு உள்ளது. தமிழச்சி தங்கப்பாண்டியன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக கூட்டணியில் இருந்திருந்ததால் அங்கு தமிழிசைக்கு வாய்ப்பு இருந்திருக்கும். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தால் 10-15 இடங்களை வெல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். ஆனால் அதிமுக மற்றும் பாஜக இரண்டுமே அந்த வாய்ப்பை தூக்கி எறிந்து விட்டதை அரசியல் நிபுணர்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். மொத்தத்தில் உன்னால் நான் கேட்டேன்.. என்னால் நீ கெட்டாய் என்ற கணக்காய் அதிமுக, பாஜக நிலைமை உள்ளதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications