ஒன்னா இருக்க ஆர்டர் போடும் டெல்லி- அடம்பிடிக்கும் எடப்பாடி-மா.செ.க்கள் கூட்டத்துக்கு ஓபிஎஸ் செக் ?
சென்னை: அதிமுகவின் அத்தனை கோஷ்டிகளும் ஒன்றாக இருந்தால்தான் லோக்சபா தேர்தலில் கொஞ்சம் நஞ்சம் அறுவடை செய்ய முடியும் என கணக்குப் போடுகிறது டெல்லி. ஆனால் இந்த அமைதி முயற்சிகளை இம்மி அளவும் ஏற்க முடியாது என அடம்பிடிக்கும் எடப்பாடி பழனிசாமி இப்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதனால் டெல்லி ஆசியுடன் ஓபிஎஸ், இபிஎஸ்-ன் மாவட்ட செயலாளர்களுக்கு செக் வைப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ் என்கிற அத்தியாயத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் திடமாகவே இருக்கிறார் இபிஎஸ். அதிமுகவில் இனி ஓபிஎஸ்- சேர்த்துக் கொள்ளப்படமாட்டார் என உறுதியான அறிவிப்பை வெளியிட்டு வருகிறார் இபிஎஸ். இது தொடர்பான சட்ட வழக்குகளிலும் ஓபிஎஸ் உடன் இனி சமரசத்துக்கு இடமே இல்லை என்கிற கருத்தை ஆணித்தரமாக இபிஎஸ் தரப்பு முன்வைக்கிறது.

ஓபிஎஸ் தரப்பு நிலைப்பாடு
இதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஓபிஎஸ் தரப்பு, அதிமுக தங்களுக்கு சொந்தம்; அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை என முட்டி மோதிக் கொண்டிருக்கிறது. இப்போது தமக்கு ஆதரவாக சசிகலா, டிடிவி தினகரன் என கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். நீதிமன்ற வழக்குகளில் ஓபிஎஸ்க்கும் அவ்வப்போது சாதகமான உத்தரவுகள் கிடைத்து வருகிறது.

இபிஎஸ் கோஷ்டியின் மா.செ.க்கள் கூட்டம்
இத்தகைய பின்னணியில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார் இபிஎஸ். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் திங்கள்கிழமையன்று மா.செ.க்கள் கூட்டத்தை இபிஎஸ் கூட்டியிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் திமுகவுக்கு எதிரான வியூகங்கள், அதிமுகவில் நீடித்து வரும் அக்கப்போர் என பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. ஆனால் இந்த கூட்டத்தையே தமது அதிகாரத்தை தக்க வைக்கும் இபிஎஸ் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. அதிமுகவில் தாமே அதிகாரம் மிக்கவர் என்பதை வெளிக்காட்டுகிற முயற்சியாகத்தான் இபிஎஸ் இப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

டெல்லி கணக்கும் அதிருப்தியும்
ஆனால் அதிமுகவின் ஒருங்கிணைந்த வாக்கு வங்கியால்தான் 2024 லோக்சபா தேர்தலில் ஆறுதல் வாக்குகளைப் பெற முடியும் என கணக்குப் போட்டுக் காத்திருக்கிறது டெல்லி மேலிடம். இபிஎஸ் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையுமே இந்த கணக்கை தகர்த்துக் கொண்டிருக்கிறது. அதனால் இபிஎஸ் மூவ்களை டெல்லி மேலிடம் ரசிக்கவே இல்லை என்கின்றனர். இதனைத்தான் டெல்லி சந்திப்புகளிலும் வெளிக்காட்டினர் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர். டெல்லியைப் பொறுத்தவரை ஒன்னா இருக்க கத்துக்கனும் என பல்லவி பாடுகிறது. ஆனால் இபிஎஸ்ஸோ, ஓபிஎஸ்ஸை ஒதுக்கி வெச்சது வெச்சதுதான் என நாட்டாமை தீர்ப்பாக அடம்பிடிக்கிறார்.

ஓபிஎஸ் என்ன செய்வார்?
தற்போது இபிஎஸ் கூட்டியிருக்கும் மா.ச்செக்கள் கூட்ட விவகாரமும் டெல்லி மேலிடப் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறதாம். ஓபிஎஸ் தரப்புதான் இந்த தகவலை பாஸ் செய்திருக்கிறது. இதனால் மா.செக்கள் கூட்டத்துக்கு எதிராக ஏதேனும் காய்நகர்த்தல்களை ஓபிஎஸ் தரப்பு, டெல்லி மேலிடத்துடன் மேற்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications