லோக்சபா தேர்தலில் போட்டியிட வாருங்கள்.. சத்யராஜ் மகளுக்கு பாஜக அழைப்பு.. மறுத்த திவ்யா சத்யராஜ்!
சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜை பாஜக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுத்ததாகவும் அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. இவர் பிரபல ஊட்டச்சத்து நிபுணர். மகிழ்மதி என்ற இயக்கத்தை நடத்தி அதன் மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறார். மேலும் தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை அளித்து வருகிறார்.

இவருக்கு அரசியலில் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் கட்சி தொடங்குவதில் அவருக்கு ஆர்வம் இல்லையாம். ஏற்கெனவே இருக்கும் கட்சியில் இணைந்து செயலாற்ற விரும்புகிறாராம்.
திவ்யா சத்யராஜ்: இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட திவ்யா சத்யராஜுக்கு பாஜக அழைப்பு விடுத்ததாகவும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன. இது குறித்து ஈ டிவி பாரத் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என நான் பத்திரிகையாளர்களிடம் நிறைய முறை சொல்லியிருக்கிறேன்.
எம்பி ஆக ஆசையா?: அப்படி சொல்லும் போது என்னிடம் அவர்கள் 4 கேள்விகளை கேட்கிறார்கள். அதாவது நீங்கள் எம்பி ஆக வேண்டும் என அரசியலுக்கு வருகிறீர்களா, ராஜ்யசபா எம்பி ஆக ஆசையா, அமைச்சர் பதவி வகிக்க ஆர்வமா, அப்பா சத்யராஜ் உங்களுக்கு பிரச்சாரம் செய்வாரா என்றெல்லாம் கேட்கிறார்கள். அதற்கு என்னுடைய பதில் என்ன தெரியுமா?
மக்கள் நலன்: பதவிக்காகவோ தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வர வேண்டும் என நான் நினைக்கவில்லை. மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கிறேன். ஏற்கெனவே களப்பணிகள் செய்ய ஆரம்பித்து சில வருடங்கள் ஆகின்றன. மகிழ்மதி இயக்கம் என்ற அமைப்பை 3 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தேன்.
மகிழ்மதி இயக்கம்: அந்த அமைப்பின் மூலம் தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கி வருகிறேன். நான் தனியாக கட்சியை தொடங்க போவதும் இல்லை. மேலும் எனக்கு வரும் தேர்தலில் போட்டியிட பாஜகவிடம் இருந்து அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால் எந்த ஒரு மதத்தை போற்றும் கட்சியுடனும் இணைவதில் எனக்கு விருப்பம் இல்லை.
பாஜக அழைத்தது உண்மை: ஏனென்றால் எனக்கு சாதி, மதத்தில் நம்பிக்கை இல்லை. எந்த கட்சியில் இணைய போகிறேன் என்பதை தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன். புரட்சித் தமிழன் தோழர் சத்யராஜின் மகளாகவும் ஒரு தமிழ் மகளாகவும் தமிழகத்தின் நன்மைக்காக உழைப்பேன். அப்பா எந்த கட்சியிலும் இருந்ததில்லை. எனக்கு அரசியல் ஆசை இருப்பது அப்பாவுக்கும் தெரியும். அவருக்கு அதில் சந்தோஷம். நான் அரசியலில் எந்த முடிவு எடுத்தாலும் என் உயிர் தோழனாகவும் ஒரு தகப்பனாகவும் எனக்கு அப்பா பக்கபலமாக இருப்பார் என திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
சத்யராஜ் விருப்பம்: இதுகுறித்து ஏற்கெனவே சத்யராஜ் ஒரு முறை பேட்டி அளித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: ஆமாம் என் மகள் திவ்யா விரைவில் அரசியலுக்கு வருவார். அவர் ஒரு கடின உழைப்பாளி, அவர் ஒரு சுயம்பு. எனவே நான் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருப்பேன். சமூக நீதி மற்றும் அரசியல் மீதான ஆர்வம் திவ்யாவுக்கு கல்லூரி காலத்திலேயே தொடங்கிவிட்டது என்றார்.
யார் இந்த திவ்யா: உலகின் மிகப் பெரிய மதிய உணவு திட்டங்களில் ஒன்றான அட்சய பாத்திரத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் நெடுந்தீவில் உள்ள இலங்கைத் தமிழர்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த செரண்டிப் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications