பாஜக பகை கட்சி கிடையாது.. ஜாதி, மதம் மீது நமக்கு பகை இல்லை.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு!
சென்னை : பாஜக பகைக் கட்சி கிடையாது. ஜாதி, மதம் மீது பகை இல்லை. ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் இதுதான் மனித குலத்திற்கு விரோதமானது என விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இன்றைய சமூக நிகழ்வுகளை சொல்லும் படமாக உருவாகியுள்ளது 'A' என்ற திரைப்படம். இந்தப் படத்தை கேஸ்லெஸ் சிவா.கோ என்பவர் இயக்கியுள்ளார். மாங்காடு அம்மன் மூவிஸ் தயாரிப்பில் ராஜகணபதி தயாரித்து, கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். மேகா, சுஷ்மிதா கதாநாயகிகளாக நடிக்க, போஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி பேசுகையில் "அம்பேத்கரை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தலைவராக காட்டுவதாகத்தான் பல படங்களில் காட்சிகள் இடம் பெறுகின்றன. அது தவறு. அவர் எல்லோருக்குமானவர். சமத்துவம், ஜனநாயகம் என்று கூறியவர்.

இப்போது ஒரு தனி நபரை விமர்சிக்காமல், ஒரு கட்சியை விமர்சிக்காமல், கருத்தியல் சார்ந்து விவாதித்தால் யாருக்கும் பகை ஏற்படாது. கருத்தியலுக்கு இடையே நடக்கும் யுத்தம் தான் மனித குல வரலாறாக இருக்கிறது. மனித நேயத்தை போற்றுவதும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதும் அமைதியை விரும்புவதும் தான் கம்யூனிசம்.
பாஜக பகைக்கட்சி கிடையாது. எந்தவொரு ஜாதி, மதம், அரசியல் கட்சி மீது பகை இல்லை. ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் இந்த மூன்றும் தான் மனித குலத்திற்குப் பகை. ஒவ்வொரு சாதிக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத தடைகள் உள்ளன. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருப்பதால்தான் சகோதரி லட்சுமி ராமகிருஷ்ணன் என்னை அண்ணா என துணிவாக கூறுகிறார். அதுதான் அம்பேத்கரின் எண்ணம்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications