தாமரை யார் பக்கம்? மாறி மாறி லெட்டர் போட்ட இலைகள்.. இனி தெரியும் - ‘வாரிசு’ மீது நடவடிக்கையா?
சென்னை: ஓ.ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பியாக கருதக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், அதை நிராகரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எடுக்கும் முடிவை பொறுத்து பாஜக யார் பக்கம் இருக்கிறது என்பதை ஓரளவு யூகிக்க முடியும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அதிமுக ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டாலும், வங்கிக் கணக்குகளையும் கட்டிடத்தையும் முடக்கிவிடலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் போட்ட திட்டங்களும் இன்று தோல்வியில் முடிவடைந்து இருக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளராக பல்வேறு தடைகளை மீறி பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தடுத்த நெருக்கடிகளில் இருந்து வெற்றிபெற்று முன்னேறி வருகிறார்.

பொதுச்செயலாளர்
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகள், போராட்டக்கங்களை கடந்து கடந்த 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது. அதில் எடப்பாடி பழனிசாமி அனைவரும் எதிர்பாத்ததைபோல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக பொறுப்பேற்றார்.

ரவீந்திரநாத் நீக்கம்
இதற்கிடையே அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் மகன்களான எம்.பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்டவர்களை எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காட்டமான பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் ரவீந்திரநாத். ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி ஆதரவாளர்கள் பலரை கட்சியிலிருந்து நீக்கினார்.

ஓம் பிர்லாவுக்கு கடிதம்
இதற்கிடையே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி, கட்சியிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருதக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் இன்று ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார்.

டெல்லியை நம்பிய ஓபிஎஸ்
ஒற்றைத் தலைமை பிரச்சனையில் தனது ஆதரவாளர்கள் துவண்டுவிடாமல் இருக்க டெல்லியை கைகாட்டி ஓ.பன்னீர்செல்வம் ஆறுதல் கொடுத்து வந்ததாக பேச்சுக்கள் அடிபட்டன. "பிரதமர் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் கேட்டுகொண்டதாலேயே இரட்டைத் தலைமைக்கு ஒப்புக்கொண்டேன். அவர்கள் கைவிட மாட்டார்கள்" என்று தனது ஆதரவார்களிடம் அவர் கூறி வந்தாராம். ஆனால் அடுத்தடுத்த நிகழ்வுகள் அவருக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தின.
Recommended Video

ஓரம்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?
குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு வேட்புமனுத் தாக்கலின்போது தனது மகனுடன் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். ஆனால், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலின்போது பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட ஜக்தீப் தங்கார் வேட்புமனுத் தாக்கலின்போது எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த தம்பிதுரை மட்டுமே அங்கிருந்தார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் யாரும் உடன் இருக்கவில்லை.

பாஜக யார் பக்கம்?
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வானதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பியாக ஏற்கக்கூடாது என்ற எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்கிறாரா அல்லது ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதத்தை ஏற்று நிராகரிக்கிறாரா என்பதை பொறுத்து பாஜக யார் பக்கம் என்பதை யூகிக்கலாம்.












Click it and Unblock the Notifications