நடு ரோட்டில்.. சொந்தக் கட்சி நிர்வாகியை கொடூரமாக தாக்கிய பாஜக சென்னை மாவட்ட நிர்வாகி.. பகீர் வீடியோ!
சென்னை: பாஜக சென்னை கிழக்கு மாவட்ட ஐடி விங் செயலாளரை, சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் நடு ரோட்டில் தாக்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்க்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் பாஜகவில் சென்னை கிழக்கு மாவட்ட ஐ.டி பிரிவு செயலாளராக பதவி விகித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு பழவந்தாங்கல் எம்.எம்.டி.சி காலனி அருகே நடு ரோட்டில் ராஜேஷை 3 பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். இதில் பாஜக நிர்வாகி ராஜேஷ் படுகாயமடைந்தார்.

சில நாட்களுக்கு முன்பு பாஜக ஐடி விங் நிர்வாகி ராஜேஷ், சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பையா குறித்து சில தகவல்களை யூடியூபில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. எஸ்.எஸ்.சுப்பையாவிற்கு சொந்தமான உணவகத்திற்குள் மது நடத்தும் புகைப்படங்களை ராஜேஷ் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாஜக மாவட்ட நிர்வாகி எஸ்.எஸ். சுப்பையா, நங்கநல்லூர் பாஜக மண்டல் தலைவர் ஜவகர் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோருடன் சேர்ந்து நேற்று இரவு பழவந்தாங்கல் எம்.எம்.டி.சி காலனி அருகே ராஜேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த வழியாக வந்த போலீஸ்காரர் ஒருவர் ராஜேஷை மீட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ராஜேஷ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சக பாஜக நிர்வாகியை பாஜக நிர்வாகிகள், அலுவலகத்துக்கு வெளியே நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக நிர்வாகிகள் சக கட்சிக்காரரை தாக்கிய சிசிடிவி வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பழவந்தாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.எஸ்.சுப்பையா உள்ளிட்ட 3 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான அவர்களைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications