சீனுக்கு வந்த கருப்பு! இது பாஜகவின் பர்சனல்.. கண்ணியத்த காப்பாத்துங்க - அண்ணாமலை பேச்சுக்கு விளக்கம்
"பொதுவெளியில் தங்களது கருத்துக்களை தவிர்ப்பதே கட்சியின் வளர்ச்சிக்கு நலம் பயக்கும். நமது கட்சியின் மாநில தலைமையும் தேசிய தலைமையும் கலந்து பேசி கூட்டணி பற்றிய முடிவை அறிவிக்கும்."
சென்னை: 2024 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்ந்தால் கட்சியில் வகித்து வரும் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை பேசியது தொடர்பாக பாஜகவினர் வெளியில் பேசி வரும் நிலையில், அதனை கண்டித்து இருக்கிறார் பாஜக மூத்த நிர்வாகி கருப்பு முருகானந்தம்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், "தேசபக்தி மிக்க பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு வணக்கம்.
நமது பாரதிய ஜனதா கட்சியில் முழுமையான கருத்துச் சுதந்திரம் உள்ளது. நம் கட்சியின் வளர்ச்சிக்கும் எதிர்கால திட்டங்களுக்கும் அனைத்து நிர்வாகிகளிடமும் விவாதித்து முடிவெடுப்பது வழக்கம்.

வெளியில் விவாதிப்பது சரியல்ல
அவ்வாறு முடிவு எடுப்பதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் நாம் விவாதித்த செய்திகளையும் விவாதிக்காத செய்திகளையும் பொதுத்தளத்தில் விவாதிப்பது கட்சி வளர்ச்சிக்கு உகந்ததல்ல. நமது கட்சிக்கு என்று சில நடைமுறைகள் உள்ளன. அதன் அடிப்படையில் கட்சி உரிய நேரத்தில் உரிய முடிவை அறிவிக்கும்.

கூட்டணி முடிவு
அதுவரை கட்சி வளர்ச்சியே நமது குறிக்கோள் என்று செயல்பட்டு 2024 தேர்தல் வெற்றிக்கு பாடுபடுபவர்களே நமது உண்மையான கட்சியின் தொண்டர்களாக இருக்க முடியும். அதுவரை பொதுவெளியில் தங்களது கருத்துக்களை தவிர்ப்பதே கட்சியின் வளர்ச்சிக்கு நலம் பயக்கும். நமது கட்சியின் மாநில தலைமையும் தேசிய தலைமையும் கலந்து பேசி கூட்டணி பற்றிய முடிவை அறிவிக்கும்.

கண்ணியம் காப்போம்
இதை விடுத்து ஒரு சிலர் கட்சியின் கொள்கைகளுக்கும் கோட்பாட்டிற்கும் முரணாக பொது வெளியிலும் சமுக ஊடகங்களிலும் நமது கட்சியின் உள் விவகாரங்களை பேசி வருகின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும், தேவையற்ற விவாதங்களை தவிர்த்து கட்சியின் கண்ணியத்தை காப்போம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து பிரதமர் மோடி அவர்களின் கரங்களை வலுப்படுத்த உறுதியேற்போம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பாஜக நிர்வாகிகள் கூட்டம்
கடந்த வெள்ளிக்கிழமை, சென்னையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, "நம்மால் பாஜகவை தமிழ்நாட்டில் வளர்க்க தனியாக இருந்தால் மட்டுமே முடியும். நான் பாஜகவை தனியாக வளர்த்து எடுக்கவே பாடுபட்டு வருகிறேன்.

அண்ணாமலை பேச்சு
நான் ஒன்றும் கட்சியின் மேனேஜர் அல்ல. நான் பாஜகவின் மாநில தலைவர் என்றுதான் சொல்கிறேன். எனக்கு உரிய சுதந்திரத்தை வழங்க வேண்டும். 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வைத்தால், கட்சியில் நான் வகிக்கும் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன்.

ராஜினாமா செய்வேன்
தமிழ்நாட்டில் பாஜகவை வெற்றிபெற செய்வதற்கான திட்டங்கள் என்னிடம் இருக்கின்றன. என்னால் எனது வழியில் செயல்பட முடியாதபோது நான் வகிக்கும் பதவியில் இருந்தே ராஜினாமா செய்து விடுகிறேன்." என்று கூறினார். அண்ணாமலையில் இந்த பேச்சு கூட்டணி மட்டுமின்றி கட்சிக்கு உள்ளேயும் சலசலப்பை கிளப்பி இருக்கிறது.

வெளியில் விவாதம்
அண்ணாமலைக்கு நெருக்கமானவரான அமர் பிரசாத் ரெட்டி இதை வரவேற்கும் வகையில் ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்த நிலையில், பாஜக சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரனோ, அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும், கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications