"டவுட்".. என் முந்தானையை பிடிச்சு இழுத்தாங்க.. ஸ்டாலினிடம் கெஞ்சினேன்.. குஷ்புவின் திடீர் பேச்சு!
முக ஸ்டாலின் மீது குஷ்பு பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்
சென்னை: நேற்றைய தினம் குஷ்புவின் பிரச்சார பேச்சு தமிழக அரசியல் களத்தில் சலசலப்பையும், லேசான அதிர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
திமுகவில் இருந்து ஏன் விலகினேன் என்பது குறித்து குஷ்பு தற்போது விளக்கம் தந்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளார்களை சந்தித்த அவர் பேசியது இதுதான்:
"திருச்சியில் ஒரு கல்யாணத்துக்கு சென்றிருந்தேன்.. என் மீது செருப்பை வீசினார்கள்.. என் முந்தானையை பிடிச்சி இழுத்தாங்க.. திமுகவில் இருக்கும் பெண்கள் அனைவரும் திட்டமிட்டு என்னை கேவலப்படுத்தி அசிங்கமாக பேசினாங்க..
கெஞ்சினேன்
அப்போ நான் பதறிப்போய் ஸ்டாலினிடம் கெஞ்சினேன் அவரை பார்க்க வேண்டும் என்று... ஆனால், சாப்பிட்டுட்டு இருக்கேன், இப்போ பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டார். என் வீட்டில் கல் எறிஞ்சாங்க.. என் 2 பெண் குழந்தைகள் தனியாக இருக்காங்க, காப்பாத்துங்கன்னு ஸ்டாலினிடம் கதறினேன்... கட்சிக்காரர்களிடம் கொஞ்சம் சொல்லுங்கள் என்று சொன்னேன்... அப்பவும் முடியாதுன்னு சொல்லிட்டார்..
பெண்கள்
இப்படிப்பட்டவர் எப்படி தமிழ்நாட்டு பெண்களை காப்பாற்றுவார்? நான் குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. இவை எல்லாத்துக்கும் காரணம் ஸ்டாலின்தான்.. நான் திருச்சியில் இருந்து கிளம்பிட்டேன்.. இது பற்றி கலைஞருக்கு தெரிந்த பின்னாடிதான், நிலைமை கட்டுக்குள் வந்தது. உடனே அவர், என்னை சென்னையில் இருக்க வேண்டாம்ன்னு சொல்லி பத்திரமாக ஹைதராபாத் அனுப்பி வைத்தார்...
கருணாநிதி
இதுவும் திமுகவில் உள்ள எல்லாருக்கும் தெரியும்.. இதை பற்றி நான் புகார் கொடுக்காமல், பல்லை கடிச்சிட்டு கட்சியில் இருந்ததற்கு காரணம் கருணாநிதி... அவர் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ளேன். ஆனால், திமுக கட்சியில் இருந்து வெளியே வந்ததற்கான காரணத்தை வெற்றி பெற்ற பின்னாடி சொல்றேன்" என்றார். குஷ்புவின் இந்த பேட்டியும், பேச்சும்தான் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.. சில முணுமுணுப்புகளையும் ஏற்படுத்த தொடங்கி உள்ளது.
ஜெயலலிதா
ஆரம்ப காலங்களில், ஜெயலலிதாவை தன்னுடைய ரோல் மாடல் என்று சொல்லி கொண்டிருந்த குஷ்பூ, தீவிர அரசியலில் அடியெடுத்து வைத்ததும் திமுகவில் தான் முதலில் இணைந்தார்... திமுகவின் முக்கிய மேடைகளில் பிரதான நபராக, முன்னணி வரிசையில் இடம்பிடித்தார். ஒரு கட்டத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாக திமுக உடன் பிறப்புகளின் கோபத்திற்கு ஆளாகி குஷ்பூவின் வீடு தாக்கப்பட்டது... பிறகு திமுகவில் இருந்து விலகினார்.. பிறகு காங்கிரஸில் இருந்தார்.. அங்கிருந்தும் விலகி பாஜகவில் ஐக்கியமாகி உள்ளார். இதுவரை தமிழகம் அறிந்த ஒன்றுதான்.
பாஜக
ஆனால், காங்கிரஸில் இருந்தபோதே இதையடுத்து, திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமான நடிகை குஷ்பு, பின்னர் அக்கட்சியில் இருந்தும் விலகி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். அவருக்கு அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஆயிரம் விளக்கு
இப்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டியிடுகிறார்.. இதற்கான தீவிர பிரச்சாரத்திலும் களம் இறங்கி உள்ளார்.. அந்த தொகுதிக்கு ஸ்டாலின் தொகுதி என்றே ஒரு பெயர் உண்டு.. அந்த அளவுக்கு திமுகவின் கோட்டையான ஆயிரம் விளக்கு தொகுதியில் துணிந்து களம் இறங்கிய குஷ்புவுக்கு சபாஷ் போடலாம்... அதேபோல, குஷ்புவின் பிரச்சார பாணி வழக்கமான அரசியல் தலைவர்களை போல் இல்லாமல் வெகு இயல்பாக இருப்பதும், எந்தவித பந்தாவும் இல்லாமல் சகஜமாக சிரித்தபடி வாக்கு சேகரித்து வரும் அவருடைய பிளஸ் பாயிணிட்.. இதை பாஜகவினரே கொஞ்சம் வியப்பாகத்தான் பார்த்து வருகிறார்கள்.
ஆச்சரியம்
ஆனால், ஸ்டாலின் குறித்த குஷ்பு சொன்ன விஷயங்கள் உண்மை என்றே வைத்து கொண்டாலும், ஏன் இந்த மலிவு அரசியலை குஷ்புவும் கையில் எடுத்துவிட்டார் என்ற ஆச்சரியமும் மேலிடுகிறது.. தொகுதியில் சிஏஏ விவகாரத்தில் பாஜக மீது மக்கள் கோபமாக இருக்கிறார்கள்.. குஷ்புவை தவிர வேறு யாரையும் வேட்பாளராக நிறுத்தியிருந்தால், இந்த அளவுக்குகூட ஆதரவு கிடைத்திருக்காது என்பது வேறு விஷயம்.. இந்த கோபத்தை தணிக்கவோ என்னவோ, ஒரு இஸ்லாமியரின் வீட்டிற்குள் நுழைந்து எல்லாருக்கும் டீ போட்டு தந்து, நல்ல பெயரை அசால்ட்டாக பெற்று சென்றார்.ஆனாலும் குஷ்பு எதிர்பார்த்த அமோக ஆதரவு தொகுதியில் கிடைக்கவில்லை என்பதே நிஜம்.
செய்வீர்களா?
அடுத்ததாக, ஜெயலலிதாவை கையில் எடுத்தார் குஷ்பு.. அதிமுக வேட்பாளர்கள் பலரும் இந்த முறை ஜெயலலிதா போட்டோ, பெயரை மறந்த நிலையில், கூட்டணியில் உள்ள குஷ்பு, இந்த யுக்தியை பயன்படுத்தினார்.. அவரது போட்டோ முதல், ஜெ. பாணியில் "செய்வீர்களா,செய்வீர்களா" என்று கேட்டார்.. ஜெயலலிதாவை போலவே, தானும் திமுகவால் அவமானங்களை சந்தித்ததாக சொன்னார்.
கூட்டணி
இப்போது இறுதியாக, தன் சொந்த சம்பவத்தை பொதுவெளியில் சொல்ல ஆரம்பித்துள்ளார்.. இவ்வளவு காலம் திமுகவின் கூட்டணியில் இருந்தபோதுகூட இந்த விஷயத்தை குஷ்பு ஏன் சொல்லவில்லை? ஸ்டாலினின் பெயரை இந்த சமயத்தில் டேமேஜ் செய்யவா? திமுகவில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை பிறகு சொல்லுவேன் என்று ட்விஸ்ட் வைத்துவிட்டு போயுள்ளாரே? அப்படியானால், அவரது குறியும் திமுகதானா? என்ற கேள்விகளையும் எழுப்பி உள்ளது.
பிரதமர் மோடி
எல்லாவற்றிற்கும் மேலாக, பாஜகவின் கொள்கைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியாமல், பாஜகவின் இந்த 5 ஆண்டு கால சாதனைகளையும் சொல்லி ஓட்டுக் கேட்க முடியாமல், குறைந்தபட்சம் பாரதபிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்கள் போட்டோ கூட இல்லாமல், ஜெ. பெயரை சொல்லி வாக்கு சேகரித்து கொண்டு, அனுதாப ஓட்டுக்களையும் அள்ள முயற்சிக்கும் வியூகம் சரிதானா? என்ற கேள்வியையும் நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை.