மருத்துவர் மீது தாக்குதல்.. பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் நடவடிக்கை! லண்டனிலிருந்து அண்ணாமலை கண்டனம்
சென்னை: தொடர்ந்து மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது, மருத்துவர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நினைவு மருத்துவமனைக்கு இன்று காலை ஒரு இளைஞர் வந்துள்ளார். அப்போது மருத்துவமனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் புற்றுநோய் பிரிவு சிறப்பு மருத்துவர் பாலாஜியின் அறைக்கு சென்றவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து அவரது வாயில் கையால் தாக்கிய அவர் தான் வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை சரமாரியாக குத்தி தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார்.
இந்த நிலையில் மருத்துவமனை பாதுகாவலர்கள் அந்த இளைஞரை பிடித்தனர் விசாரணையில் இந்த இளைஞர், புது பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பதும் தனது தாய்க்கு அளித்த சிகிச்சை குறித்து தவறான புரிதல் காரணமாக மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்தது. தொடர்ந்து விக்னேஷை கிண்டி காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்நிலையில், இது போன்ற குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்து, புற்றுநோய் மருத்துவர் திரு பாலாஜி அவர்கள், கத்தியால் குத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைந்து நலம்பெற, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஏற்கனவே பல முறை, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என தாக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒவ்வொரு முறையும் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளின் போது, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறுவதோடு மட்டுமே நிறுத்திக் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், தொடர்ச்சியாக பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகியிருக்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நெல்லை அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம், வேலூர் அரசு மருத்துவமனையில், மருத்துவப் பயிற்சி மாணவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். கடந்த வாரம், திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில், மருத்துவர் மீது, திமுக உறுப்பினர் உள்ளிட்ட 10 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது, மருத்துவர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை திமுக அரசு உணர வேண்டும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications