“கரைவேட்டி கட்டாத திமுகவாக செயல்படுகிறது கரூர் காவல்துறை” - ஹெச்.ராஜா அட்டாக்!
சென்னை: "காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் தகுந்த அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்திருக்க வேண்டும். அப்படி ஏதும் இருந்ததாக தெரியவில்லை. கரூர் காவல்துறை கரை வேட்டி கட்டாத திமுகவாக செயல்படுகிறது" என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 41 பேர் பலியாகியுள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரின் நிலைமை மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மற்றவர்கள் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 31 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, "கரூரில் நடைபெற்ற சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. மதுரையில் நடைபெற்ற இந்து முன்னணி மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்துகொண்டனர். கீழே சின்ன குப்பை பாக்கெட் கூட விழுந்தது கிடையாது. இந்து முன்னணி தொண்டர்கள் நாற்காலிகளை எல்லாம் ஒழுங்குபடுத்தினர். இந்த மாதிரி கட்டுப்பாடுகளை வைத்து கட்சியை வளர்த்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. தவறு தான்.
ஆனால் நிர்வாகம் என்ன செய்தது? காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் தகுந்த அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்திருக்க வேண்டும். அப்படி ஏதும் இருந்ததாக தெரியவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இது எப்படி நடந்தது, காரணம் என்ன என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
மாநில அரசாங்கமும் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஏதாவது சதியா, இயல்பாக நடந்த விபத்தா என்பது குறித்து மாநில அரசும் அதனுடைய அறிக்கையில் குறிப்பிட வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதியும் இது குறித்து விசாரிக்க வேண்டும். ஏற்கெனவே கரூர் எஸ்.பி சரியாக முறைப்படி செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கரூர் காவல்துறை கரை வேட்டி கட்டாத திமுகவாக செயல்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications