இடுப்பில் மண்சட்டி.. தலையில் கொசுவலை.. ஜெயக்குமாரிடம் நூதன மனு அளித்த பாஜக மகளிர் அணி தலைவி
அமைச்சர் ஜெயக்குமாரிடம் பாஜக பெண் தலைவர் மனு அளித்துள்ளார்
சென்னை: இடுப்பில் மண்சட்டி, தலையில் கொசுவலையை போர்த்தியபடியே அமைச்சர் ஜெயக்குமாரிடம் வந்து மனு அளித்த பாஜக மகளிர் அணி தலைவியால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் பொதுமக்களிடம் மனுக்களை வழங்கி கொண்டிருந்தனர்.
அந்த நேரம் பார்த்து, இடுப்பில் மண்சட்டியை வைத்து கொண்டும், தலையில் கொசுவலையை போர்த்திக்கொண்டும் ஒருவர் கையில் மனுவுடன் வந்தார்.
அவர் பெயர் அம்சவேணி... திருவொற்றியூர் நகர பா.ஜனதா மகளிர் அணி தலைவியாக உள்ளார். மனுவை கொடுத்ததும், அமைச்சர் அதனை வாங்கி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தார்.
பின்னர் இதை பற்றி அம்சவேணி சொல்லும்போது, "நான் வசிக்கிற 6-வது வார்டு திருவொற்றியூர் மேற்கு பகுதிகளில் கொசு தொல்லை ரொம்ப அதிகமாக இருக்கு. குடிநீர் பிரச்சனையும் அதிகமாக இருக்கு.
பலமுறை மாநகராட்சி அதிகாரிகள்கிட்ட புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அதனால அதிகாரிகள் அலட்சிய போக்கை கண்டிப்பதற்காகவே இப்படி கொசுவலையை தலையில் போர்த்திக்கொண்டும், இடுப்பில் மண்சட்டியை வைத்துக்கொண்டும் புகார் மனு கொடுத்தேன்" என்றார்.