குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை.. டங் ஸ்லிப்பான நயினார்
சென்னை: மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பில்லை என சொல்வதற்கு பதிலாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பாதுகாப்பில்லை என சொன்னதால் அவையில் சிரிப்பலை எழுந்தது. பின்னர் சுதாரித்துக் கொண்டு தனது கருத்தை சரியாக கூறினார்.
தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி பொது பட்ஜெட்டும் அடுத்த நாள் 14 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரு பட்ஜெட் மீதான விவாதங்கள் தற்போது நடைபெறுகின்றன.
இந்த நிலையில் நேற்றைய தினம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

குடியுரிமைத் திருத்த சட்டம்
அப்போது ஸ்டாலின் பேசுகையில் 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின்படி குடியுரிமை பெற மதம் அடிப்படையாக இல்லை. ஆனால் இன்றைய மத்திய அரசு கொண்டு வந்த திருத்தத்தில் மதத்தை ஒரு அடிப்படையாக மாற்றுகிறது. இந்திய அரசியலயமைப்புச் சட்டம் இந்தியாவை மதசார்ப்பற்ற அரசு என்கிறது.

மதத்தின் அடிப்படையில்
அதன்படி பார்க்கும்போது மதத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த சட்டத்தையும் கொண்டு வர முடியாது. அதனால்தான் இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க வழி வகை செய்யும் திருத்த மசோதா கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இஸ்லாமிய சமூகத்தின் பெயர்
இதில் மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து குடியேறிய இஸ்லாமிய சமூகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளனர். இது மக்களை மத ரீதியாகப் பிரிக்கிறது என்பதால் இந்தச் சட்டத்தை ஆரம்ப நிலையிலேயே திமுக எதிர்த்தது என தெரிவித்த ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இன-மத-மொழி ஒடுக்குமுறைகளால் அல்லல்படும் மக்கள் அடைக்கலம் தேடிவரும் மதச்சார்பற்ற மக்களாட்சி நாடு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் தாய்த்திருநாடு!

குடியுரிமை வழங்க மதம்
நம்பிவரும் மக்களுக்குக் குடியுரிமை வழங்க மதமும் இனமும் தடையாக இருக்கலாமா? அதனால்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தேன் என தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார்.

இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள்
அப்போது அவர் பேசும்போது இந்தச் சட்டம் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டமில்லை என்றார். அப்போது இடைமறித்த சபாநாயகர் அப்பாவு இந்த சட்டம் என்றால் எந்த சட்டம் முதல்வர் கொண்டு வந்த சட்டமா என கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. உடனே நயினார் நாகேந்திரன், முதல்வர் கொண்டு வந்ததை சொல்லவில்லை. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என குறிப்பிட்டார்.

அப்பாவு கிண்டல்
உடனே சபாநாயகர் அப்பாவு, அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் நன்றி என கூறினார். இதனால் அவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது. அப்போது சுதாரித்துக் கொண்ட நயினார் நாகேந்திரன், தவறாக குறிப்பிட்டுவிட்டேன், மத்திய அரசின் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என கூறி வெளிநடப்பு செய்கிறோம் என தெரிவித்தார். இது போல் நயினார் நாகேந்திரன் வாய்த் தவறி கூறியது நேற்று அவையில் தொடர் சிரிப்பலையை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications