ஆளுநர் ஏன் அப்படி சொன்னார் தெரியுமா.. தமிழ்நாடு- தமிழகம் விவகாரம்! வானதி சீனிவாசன் புது விளக்கம்
சென்னை: தமிழ்நாடு- தமிழகம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்துகளைக் கூறி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் பாஜகவின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று கூறியிருந்தார். இது தமிழக அரசியலில் பேசுபொருளானது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்தச் சூழலில் இது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பொங்கல் பரிசு மட்டுமா.. இதையும் நோட் பண்ணுங்க! தமிழ்நாடு அரசின் ஸ்பெஷல் அறிவிப்பு.. குஷி செய்தி
ஆளுநர் பேச்சு
சமீபத்தில் சென்னையில் பேசிய ஆளுநர் ரவி, "நமது நாட்டில் சென்னையில் மட்டும் வித்தியாசமான அரசியல் சூழல் நிலவுகிறது. இங்குத் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் உள்ளது. இது ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. ஆனால் இங்குள்ள சிலர், இதை அமெரிக்காவைப் போலப் பல தேசங்கள் இணைந்த நாடாகக் கருதுகின்றனர். அது தவறு. தமிழர்கள் தங்களைத் திராவிடர்களாக உணர்கின்றனர். தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்" என்று அவர் கூறியிருந்தார்.
எதிர்ப்பு
இது அரசியல் அரங்கில் பேசுபொருளானது... இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பிலும் கடும் எதிர்வினையாற்றினர். இதனிடையே பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இது குறித்து விளக்கமளித்துள்ளார். பொங்கல் விழாவை முன்னிட்டு மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழாவில் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கினார்.
விளக்கம்
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொங்கல் வைக்கின்ற நிகழ்வு நடை பெற்று வருகிறது.. பாரம்பரிய விளையாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.. இன்று அதிகமான இடங்களில் பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகிறார்கள்" என்றார். தொடர்ந்து தமிழகமா? தமிழ்நாடு என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "பேச்சு வழக்கில் தமிழ்நாடு சொல்லி இருக்கிறோம்.. அவர் சொல்கின்ற அர்த்தம் தனிநாடாகப் போகக்கூடாது என்பதுதான்.. தமிழகம் என்பது ஒன்றுபடுத்தும்.. அனைவரும் இந்தியர்கள் ஒருமைப்பாட்டு உணர்வுக்காகச் சொல்லி இருக்கிறார்.. இதனை அரசியல் ஆக்கக்கூடாது.
தேவையில்லாத அரசியல்
நாட்டின் தேசிய உணர்வு என்பது இங்குள்ள கலாச்சார உணர்வுதான். இது இந்திய நாட்டின் உணர்வு.. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை புரியும்படி அழுத்தம் திருத்தமாகத் தனது கருத்துக்களை ஆளுநர் முன் வைக்கிறார்.. அது சிலருக்குப் பிடிக்கவில்லை.. அதை விமர்சித்து வருகிறார்கள்.. தேசிய உணர்வு, தேசிய ஒருமைப்பாடு குறித்துத் தானே ஆளுநர் பேசுகிறார்.. எங்கேயும் ஆளுநர் பிரிவினைவாதம் பேசவில்லை.. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட அவர் பேசி வருகிறார். ஆனால், சிலர் இதைத் தேவையில்லாமல் அரசியலாக்கி வருகிறார்கள்.
திமுக மீது சாடல்
திமுக தனது வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல் இருப்பதையே வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறது.. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஒரு பேச்சு, அதன் பின் ஒரு பேச்சாக உள்ளது.. மின்சார கட்டணம், பால் விலை எனத் தொடர்ந்து விலைகளை உயர்த்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகப் பெரிய துயரத்தைச் சந்தித்து வருகிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்த போது பொங்கல் தொகுப்பு குறித்து அவர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இப்போது ஆட்சிக்கு வந்ததும் பொங்கல் தொகுப்பாக என்ன கொடுக்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
கோவை பிச்சினை
கோவையில் சாலைகள் ரொம்பவே மோசமாக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற முறையில், ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்திலும் இதைப் பற்றிப் பேசி வருகிறேன்.. கோவை சாலை படுமோசமாக உள்ளது.. பொறுப்பு அமைச்சர் வருகிறார்.. பார்க்கிறார்.. அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.. அவருடைய கார் மட்டும் தனி சாலையில் செல்கிறதா எனத் தெரியவில்லை.. சாதாரண மக்கள் பயன்படுத்தும் சாலை உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதேபோல குப்பை பிரச்சனை அதிகமாக உள்ளது.. இதுபோன்ற பிரச்சினைகளைச் சரி செய்ய வேண்டிய கவன்சிலர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை" என்று சாடினார்.