"தமிழ் மண்ணில் பாஜக ஆட்சி வரணும்.. மொத்தம் 144 தொகுதிகளில் இலக்கு!" இணை அமைச்சர் எல்.முருகன் பரபர
சென்னை: புதுச்சேரியில் வரும் மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் பணிகளைத் தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்,
நாட்டில் அடுத்து வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை பல்வேறு மாநிலங்களிலும் பாஜக தொடங்கி வருகிறது.
அதன்படி புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்று ”முப்பாட்டன் முருகன்”, இன்று ”கிருஷ்ண பரமாத்மா” பேரன் - சீமான் அறிவித்த ஆன்மீக அரசியல்
புதுச்சேரி
இதனிடையே மூன்று நாள் பயணமாக எல் முருகன் கடந்த வியாழக்கிழமை புதுச்சேரி வந்தார். முதல் நாளில் அவர் காரைக்கால் பகுதிக்குச் சென்று கட்சி நிர்வாகிகளைச் சந்தித்தார். மேலும், அவர் மக்களையும் நேரில் சந்தித்து உரையாடினார். இதையடுத்து நேற்று புதுச்சரி சென்ற எல். முருகன், காலாப்பட்டு கனகசெட்டிக்குளம் பகுதியில் ஆலய தரிசனம் செய்து விட்டு மீனவ மக்களுடன் கலந்துரையாடினார்,
எல் முருகன்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மீனவர்களின் நலன் காக்கத் தனியாக அமைச்சகத்தை அமைத்தது பிரதமர் மோடி தான். அதற்கு முன்பு வரை வெறும் 3 ஆயிரம் கோடி மட்டுமே மீனவ துறைக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போது சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் மீனவர் நலன் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. இப்போது கடல் வளத்தைப் பாதுகாக்க மீன்வள சட்டத்தைக் கொண்டு வருகிறோம்.
மீன்வள சட்டம்
கடலில் முதல் 12 கிலோமீட்டருக்கு எவ்வித கூடுதல் கட்டுப்பாடும் இல்லை. இப்போது இருக்கும் அதே நடைமுறை தான் தொடரும். இந்தச் சட்டம் 200 மைலுக்கு வெளியே வரும் வெளிநாட்டுக் கப்பல்களைக் கட்டுப்படுத்த மட்டுமே இந்த சட்டம் உதவும். அதேபோல நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் 100 கிராமங்களை அடையாளம் கண்டு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூபாய் 5 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது" என்றார்.
144 தொகுதிகள்
அதைத் தொடர்ந்து மக்களவை தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய இணை அமைச்சர் எல். முருகன், "அடுத்து வரும் மக்களவை தேர்தலில் பாஜக வெல்ல வேண்டும் என்பதை மட்டும் இலக்காக வைத்து நாம் பணியாற்ற வேண்டும். தமிழகம், புதுவை, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 144 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். வரும் 2024 மக்களவை தேர்தலில் இந்தத் தொகுதிகளில் பாஜக கட்டாயம் வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மண்
அதில் புதுச்சேரி மக்களவை தொகுதியும் இடம் பெற்றுள்ளது. தென் இந்தியாவில் கர்நாடகாவுக்குப் பின்னர் புதுச்சேரியில் தான் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அதேபோல தமிழ் மண்ணிலும் பாஜக ஆட்சியை அமைக்க வேண்டும். அதேபோல புதுவை மக்களவை தொகுதியில் நாம் வெல்ல வேண்டும். இதற்கான பணிகளை நாம் இப்போதே தொடங்க வேண்டும். பிரதமர் மோடி அரசின் 8 ஆண்டுக்கால சாதனைகளை நாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.