நெல்லை நயினார் நாகேந்திரன் போட்ட கேஸ்.. சென்னை ஹைகோர்ட்டில் இன்று நடக்கிறது தேர்தல் வழக்கு விசாரணை
சென்னை: உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை உத்தரவால், நயினார் நாகேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கை ஆகஸ்ட் 25 ம் தேதிக்கு சென்னை உயர் நதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது.. மேலும் ராபர்ட் புருஸ்ஸின் வேட்புமனு, அவரின் சொத்து மற்றும் வழக்கு விவரங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யவும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வரஉள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது..
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ராபர்ட் ப்ரூஸும், பாஜக சார்பில் தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் களமிறங்கினார்கள்.. பிறகு வெளியான தேர்தல் முடிவில், நயினார் நாகேந்திரனை விட 1.65 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று ராபர்ட் ப்ரூஸ் வெற்றி பெற்றார்.

நெல்லை நயினார் நாகேந்திரன்
அதாவது, ராபர்ட் புரூஸ் 5,02,296 வாக்குகளும், நயினார் நாகேந்திரன் 3,36,676 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.. இதனால், அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதனிடையே, ராபர்ட் ப்ரூஸ் வெற்றிக்கு எதிராக நயினார் நாகேந்திரன் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், "ராபர்ட் ப்ரூஸ் வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், தன் மீது உள்ள வழக்குகளின் விவரங்களையும் மறுத்துவிட்டார். எனவே, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இந்த வழக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக விசாரணையில் இருந்து வருகிறது. சமீபத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ராபர்ட் ப்ரூஸ் தரப்பில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்று வருவதால் பின்னர் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இடைக்காலத் தடை
இதனையடுத்து, ராபர்ட் ப்ரூஸ் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் சொத்து மற்றும் குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை கடந்த ஜூலை 29ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.
இதனிடையே தன் மீதான தேர்தல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ராபர்ட் ப்ரூஸ் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது, ராபர்ட் ப்ரூஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "இந்த வழக்கு தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
அசல் ஆவணங்கள்
இதற்கு நயினார் நாகேந்திரன் தரப்பில் கடுமையான ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், சென்னை ஹைகோர்ட்டில் நடைபெற்றும்வரும் தேர்தல் வழக்கின் அசல் ஆவணங்களை நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அத்துடன், ஹைகோர்ட்டில் நடைபெறும் ராபர்ட் புரூஸ்க்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடையும் விதித்தனர். பிறகு இவ்வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்திருந்த நிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ராபர்ட் புருஸ் தரப்பில், வழக்கை விசாரிக்க ஆகஸ்ட் 20 ம் தேதி வரை இடைக்கால தடை விதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இன்று வழக்கு விசாரணை
இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.மேலும் ராபர்ட் புருஸ்ஸின் வேட்புமனு, அவரின் சொத்து மற்றும் வழக்கு விவரங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யவும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்றைய தினம் விசாரணை நடைபெற உள்ளது நெல்லை மாவட்ட அதிமுக, காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications