ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் லஞ்சம்.. 300 கோடி ஊழல்! நியாயமா? இது நியாயமா? - பாஜக நாராயணன் ஆவேசம்!
300 கோடி ஊழல்! நியாயமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நாராயணன் திருப்பதி.
சென்னை : நெல் கொள்முதல் செய்ய கிலோவுக்கு ஒரு ரூபாய் லஞ்சம் பெறுவதாகவும், ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் ஊழல் செய்யப்படுவதாகவும் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.
நெல் கொள்முதலில் விவசாயிகளிடம் இருந்து லஞ்சம் பெறப்படுவதாக திமுக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் பாஜக நாராயணன்.
இவர்கள் தான் முழு நிதியையும் செலுத்தி நெல்லை வாங்கும் மத்திய அரசை குறை கூறி வருகின்றனர் என விமர்சித்துள்ளார் நாராயணன்.

நெல் கொள்முதல்
இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கு கிலோ ஒன்றிற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.2060 ஐ (கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய், 60 காசுகள்) முழுமையாக மத்திய அரசு வழங்கி வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை கொள்முதல் நிலையங்களை அமைத்து குறைந்தபட்ச ஆதார விலைக்கு வாங்கும் பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உள்ளது.

1 ரூபாய் லஞ்சம்
தமிழ்நாட்டில் வருடத்திற்கு சுமார் 30 லட்சம் மெட்ரிக் டன் (அதாவது 300 கோடி கிலோ) நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், கொள்முதல் செய்வதற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கிறது. விளைவித்த பொருளுக்கு ஒரு பைசா கூட விவசாயிகள் செலவு செய்ய தேவையில்லை. ஆனால், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு கிலோ நெல்லுக்கும் ரூபாய். 1 லஞ்சமாக பெறப்படுகிறது.

பங்கு
அதாவது ஒவ்வொரு வருடமும் 1 ரூபாய் லஞ்சப்பணமாக 300 கோடி ரூபாய் ஊழல் செய்யப்படுகிறது. இந்த பணத்தை இடைத்தரகர்களும், அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும் பங்கு போட்டு கொள்கின்றனர். ஆனால், இவர்கள் தான் முழு நிதியையும் செலுத்தி நெல்லை வாங்கும் மத்திய அரசை குறை கூறி வருகின்றனர். முழு தொகைக்கான பணமும் நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.

நியாயமா
ஆனால், லஞ்சம் ஒரு ரூபாய் லஞ்சம் செலுத்த மறுத்தால், கொள்முதல் செய்ய மறுக்கப்படுவது கொடுமையான செயல். எவ்வளவு போராடியும் இந்த ஊழல் அமைப்பை அசைத்து கூட பார்க்க முடியாத கட்டமைப்பை பெற்றுள்ளது தான் 'திராவிட மாடல்'!!! ஒரு ரூபாய் லஞ்சம்! 300 கோடி ஊழல்! நியாயமா? இது நியாயமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நாராயணன் திருப்பதி.












Click it and Unblock the Notifications