இந்துக்கள் மீதான வெறுப்பின் உச்சம்.. நடராஜர் கோயிலில் தீண்டாமை சுவரா? திருமாவளவனுக்கு நாராயணன் பதில்
சென்னை: பட்டியலினத்தவர்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பங்கேற்றது குறித்து கேள்வி எழுப்பிய திருமாவளவனுக்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதில் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ளது நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமம். இங்கு இன்று நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். குருபூஜை முடிந்தபிறகு அங்கு 100 ஆதிதிராவிடர்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். பட்டியலினத்தவர்களுக்குப் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்தார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.

நநந்தனார் பிறந்த ஆதனூரில் 100 பட்டியல் இனத்தவர்களுக்கு பூணூல் அணிவிக்கிறாராம் ஆளுநர் ரவி, இது மேன்மைப்படுத்துகிறோம் எனும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவு செய்வதாகும், இதுதான் சனாதனம். பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிந்த ஆதி திராவிடர்களை கோயில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்? நந்தன் வழிபட்டதால் நடராசர் கோவிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரைத் தகர்த்து வாசலை ஆளுநர் திறந்து விட வேண்டுகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது X (ட்விட்டர்) சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "நந்தன் வழிபட்டதால் நடராசர் கோவிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரை தகர்த்து வாசலைத் திறந்து விட வேண்டுகிறோம் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளது மீண்டும் ஒரு கட்டுக் கதையினை சொல்லி மக்களை குழப்பும் இந்து விரோத செயலே.
நந்தன் வழிபட்டது திருப்புன்கூர் சிவலோகநாதர் கோவில் என்பது உலகறிந்த உண்மை. அப்படியிருக்க சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் வழிபட்டது போன்ற மாயையை உருவாக்குவதும், அங்கு திருப்பணி முடிந்து அமைக்கப்பட்ட சுவரை தீண்டாமை சுவர் என்று வதந்தியை பரப்புவது மலிவான அரசியல் மட்டுமல்ல, ஹிந்துக்களின் மீதான வெறுப்பின் உச்சம்.
தொடர்ந்து இந்து மத இதிகாசங்களை பரிகாசம் செய்வது, அவமானப்படுத்துவது, ஆங்கிலேயர்கள் உண்மைக்கு புறம்பாக எழுதிய நூல்களை 'மனு ஸ்ம்ரிதி' என்று பொய் சொல்லி அதை தீயிட்டு கொளுத்துவது என்று இல்லாததை இருப்பது போல் சொல்லி மக்களை தூண்டி விட்டதை போல் நந்தனார் விவகாரத்தில் திருப்புன்கூர் கிராமத்தில் வழிபட்டதை சிதம்பரம் என்று பொய் சொல்லி தூண்டி விடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற ஹிந்து விரோத செயல்பாடுகளை தவிர்த்து மக்கள் நலன் குறித்த நடவடிக்கைகளில் திருமாவளவன் ஈடுபட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications