பாஜகவிற்காக அதிமுக காத்திருக்கட்டும்.. கவலையில்லை.. போட்டுடைத்த நாராயணன்.. கொதிக்கும் "ரரக்கள்"
பாஜக என்ன முடிவை எடுக்கும் என்றுதான் எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் என்று இரண்டு தரப்பும் காத்துகொண்டு இருக்கிறது
சென்னை: பாஜக முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும், அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை என்று பாஜக நாராயணன் திருப்பதி சொன்ன கமெண்ட் அதிமுகவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக மிக தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இந்த தேர்தலுக்காக தீவிரமான பணிகளை அவர்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.
இதையடுத்தே 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமனம் செய்தது. செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் இங்கே வேட்பாளரை களமிறக்குவது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தரப்பும் ஆலோசனை செய்து வருகிறது.
இரண்டு தரப்பும் தீவிரமான ஆலோசனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
என்னாது கையை வெட்டுவார்களா? கொலை செய்வார்களா? ரவுடி போல் பேசும் அமைச்சர்கள்.. பாஜக நாராயணன் தாக்கு
எடப்பாடி பழனிசாமி
இரண்டு தரப்பும் வேட்பாளரை அறிவிக்க போவதாக கூறிவிட்டாலும் கூட இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி சார்பாக வேட்பாளரை அறிவிப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. நிர்வாகிகள் சிலர் போட்டியிட்டு காசை செலவு செய்ய விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பது உறுதியாகவில்லை. அதனால் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் நாம் போட்டியிட்டால் பாஜக தரப்பு நமக்கு ஆதரவு கொடுக்குமா என்றும் எடப்பாடி தரப்பில் நிர்வாகிகள் சிலர் கருதுகிறார்களாம்.
ஓபிஎஸ்
இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் வேட்பாளரை களமிறக்க ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் பாஜக தரப்பு போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம் என்றும் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் பாஜக முடிவிற்காக காத்து இருக்கிறது. பாஜக என்ன முடிவை எடுக்கும், வேட்பாளரை களமிறக்குமா என்று தெரியாமல் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் குழப்பத்தில் உள்ளது. மொத்தத்தில் பாஜக என்ன முடிவை எடுக்கும் என்றுதான் எடப்பாடி, ஓ பன்னீர்செல்வம் என்று இரண்டு தரப்பும் காத்துகொண்டு இருக்கிறது.
காத்திருக்கட்டும்
இந்த நிலையில்தான் பாஜக வேட்பாளரை களமிறக்குமா என்ற கேள்விக்கு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி நேற்று பதில் அளித்தார். அப்போது பாஜக இது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறது. நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். எங்கள் கட்சியும் போட்டியிட வேண்டும் என்பது நிர்வாகிகளின் திட்டமாக உள்ளது. இதை பற்றி ஆலோசனை செய்து வருகிறோம். நாங்கள் பண்பட்ட கட்சி. யார் மனதையும் புண்படாமல் பார்த்துக்கொள்வோம். எங்கள் முடிவு என்ன என்று ஒன்று இரண்டு நாட்களில் தெரியும்.
ஆலோசனை
இதற்காக ஆலோசனை செய்து வருகிறோம். எங்கள் தலைமைதான் இதற்கான முடிவை எடுக்கும். எங்கள் முடிவு என்னவென்று உங்களுக்கு விரைவில் தெரிய வரும். நாங்கள் முடிவு எடுக்கும் வரை அதிமுக காத்து இருக்கட்டும். பாஜக முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும், அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை, என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு அதிமுக தரப்பில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளதாம். அதிமுக காத்திருக்கட்டும் என்று பாஜக இப்படி சொல்வது அதிமுக நிர்வாகிகளை அப்செட் ஆக்கி உள்ளதாம். இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்ததில், தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான்.
எதிர்க்கட்சி
எங்கள் கட்சிக்குத்தான் அதிக எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். நாங்கள்தான் கூட்டணியிலும் பிரதான கட்சி. அப்படி இருக்க எங்களை காத்திருக்க சொல்வதில் என்ன நியாயம். ஒரு காலத்தில் அதிமுக கூட்டணிக்காக காத்திருந்தவர்கள், இப்போது எங்களை காத்திருக்க சொல்கிறார்கள் என்று விமர்சனம் வைத்துள்ளனர். பாஜகவின் இந்த பேச்சு அதிமுக தரப்பில் ஒரு வித சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து இதற்காக பதிலடி வழங்கப்படும் என்று அதிமுக டாப் தலைவர்கள் சிலர் நம்மிடம் தெரிவித்துள்ளனர்.