ராஜிவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை! மாஜி ஏடிஎஸ்பி அனுசுயாவுக்கு மிரட்டல்? நாராயணன் திருப்பதி பகீர்!
சென்னை : ராஜிவ் காந்தி அவர்களின் படுகொலையின் போது பாதுகாப்பு பணியில் இருந்தவரும், குற்றவாளிகளை விடுவித்தது குறித்து விமர்சிக்கும் அக்கொலை வழக்கின் முக்கிய சாட்சியுமான முன்னாள் காவல் துறை அதிகாரி அனுசுயாவுக்கு மிரட்டல்கள் வருகின்றன என பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைப் போல தங்களையும் விடுவிக்க வேண்டும் என நளினி உள்ளிட்ட ஆறு பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் 6 பேரை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது.
மாசம் பொறந்தா சுளையா ரூ 43 ஆயிரம் சம்பளம்.. போட்டி தேர்வு இல்லை.. ஆவினில் வேலை! அப்ளை பண்ணுங்க!
7 பேர் விடுதலை
இதனைத் தொடர்ந்து நேற்று நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்டோர் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதனை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன.
30 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலை பெற்றுள்ள நளினி உள்ளிட்டோர் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகிறது.
காங்கிரஸ்
முன்னதாக பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட போதே காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் நளினி உள்ளிட்ட 6 பேர் தற்போது மீண்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளதை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி விமர்சித்து இருந்தார். இதேபோல காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். இந்த விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏடிஎஸ்பி அனுசுயா
மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி அனுசுயா படுகாயம் அடைந்தார். தீவிர சிகிச்சை பெற்ற பின் ஏடிஎஸ்பியாக இருந்து தற்போது பணி ஓய்வு பெற்றுள்ள அவர் ஏழு பேர் விடுதலைக்கு எதிராக கடுமையாக கண்டனங்களை தெரிவித்து வருகிறார். ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பின் போது அவரது இரண்டு விரல்கள் மாயமானதோடு பல இடங்களில் குண்டுகள் பாய்ந்தது. குற்றவாளிகளை அடையாளம் கண்ட சாட்சியாகவும் அவர் இருந்தார்.
கொலை மிரட்டல்
இந்த நிலையில் விடுதலையான பிறகு நளினி செய்தியாளர்கள் சந்திப்பில் பொய்களை கூறி வருவதாக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். இதுதொடர்பாக தொடர்ந்து பல செய்தி நிறுவனங்களின் மூலம் பேசிய அவர், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுதலையான நளினி, ஊடகங்களிடம் பொய்யான தகல்களைக் கூறுகிறார். இனியாவது திருந்தி வாழ வேண்டும். அவர் ஒரு துரோகி என கடுமையாக விமர்சித்துள்ளார். இதனிடையே அவருக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியிருக்கிறார்.
நாராயணன் திருப்பதி
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,"ராஜிவ் காந்தி அவர்களின் படுகொலையின் போது பாதுகாப்பு பணியில் இருந்தவரும், குற்றவாளிகளை விடுவித்தது குறித்து விமர்சிக்கும் அக்கொலை வழக்கின் முக்கிய சாட்சியுமான முன்னாள் காவல் துறை அதிகாரி அனுசுயா அவர்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன என்று கூறியுள்ள நிலையில், கொலை மிரட்டல் விடும் 'காலிகளை' கண்டுபிடித்த கைது செய்ய வேண்டியது தமிழக காவல் துறையின் கடமை மற்றும் பொறுப்பு.
கண்காணிக்க வேண்டும்
முன்னாள் பிரதமரை கொன்ற கொலைகார கூட்டத்தின் ஆதரவாளர்கள் இன்னும் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது. ஆகவே, அனுசுயா அவர்களுக்கு காவல் துறை உரிய பாதுகாப்பை உறுதி செய்வதோடு, ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு காரணமான, தடை செய்யப்பட்டுள்ள விடுதலை புலிகள் இயக்கத்தினருடன் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட ஏழு குற்றவாளிகள் இன்னும் தொடர்பில் உள்ளார்களா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.