ஜி.கே.வாசனுக்கு ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் பாஜக... மத்திய அமைச்சர் பதவி கியாரண்டி
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை பாஜகவில் இணைப்பதற்காக அவருக்கு பல ஆஃபர்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
மத்திய அமைச்சர் பதவி தருவதற்கு பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் கிரீன் சிக்னல் கொடுத்தும் கொள்கை காரணமாக முடிவெடுக்காமல் இருந்து வருகிறார் வாசன்.
இருப்பினும் வாசனை எப்படியாவது பாஜகவில் இணைத்து ப.சிதம்பரத்துக்கு எதிராக தமிழகத்தில் தீவிர அரசியல் செய்து அவரை ஓரங்கட்ட வேண்டும் என்பது டெல்லியின் கணக்காம்.

கருத்துவேறுபாடு
பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த ஜி.கே.வாசன், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய புள்ளியியல் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். மேலும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார். இதனிடையே ராகுல்காந்தியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக காங்கிரஸிலிருந்து விலகி த.மா.கா.வை தொடங்கி நடத்தி வருகிறார்.

சந்திப்பு
பிரதமர் மோடியுடன் மிகவும் நெருக்கம் பாரட்டும் ஜி.கே.வாசன் அண்மையில் கூட அவரை டெல்லியில் சந்தித்து பேசினார். அதோடு மட்டுமல்லாமல் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். அப்போதே உங்களுக்கான மரியாதையும், முக்கியத்துவமும் தங்கள் தரப்பிலிருந்து நிச்சயம் கிடைக்கும் எனக் கூறிய அவர்கள் சூசகமாக அழைப்பும் விடுத்தனர்.

இணைப்பில்லை
மேலும், அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வாசன் மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறி சமாளித்தார். த.மா.கா.வை பாஜகவுடன் இணைக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால் டெல்லியிலிருந்து இப்போது மீண்டும் அழைப்பு படலம் வலுவாக உள்ளதால் அது தொடர்பாக மிகவும் நெருக்கமானவர்களுடன் மட்டும் வாசன் ஆலோசித்துள்ளார்.

சிதம்பரம் குறி
ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியேவந்த பிறகு ப.சிதம்பரம் தீவிர அரசியல் செய்வதை பாஜக ரசிக்கவில்லை. மேலும், அண்மையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடந்த அனைத்துப் போராட்டங்களிலும் ப.சி. பங்கெடுத்தது பற்றிய தகவலும் டெல்லியை எட்டியுள்ளது. இதனால் அவரை தமிழக அரசியலில் ஓரங்கட்ட வாசன் சரியான தேர்வாக இருப்பார் என்பது பாஜக தேசியத் தலைமையின் நம்பிக்கையாம்.












Click it and Unblock the Notifications