அமைச்சரால் அவதிப்படும் விவசாயிகள்? அடுத்த துருப்புச்சீட்டை கையில் எடுத்த பாஜக.. விரைவில் போராட்டம்!
சென்னை : விவசாயிகளை வீதியில் விட்ட அரசையும், அமைச்சரையும் கண்டித்து, போராட்டத்தை கையிலெடுக்க பாஜக முடிவு செய்திருப்பதாக பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகம் வந்து சென்ற பிறகு பாஜகவின் பணிகளில் வேகமெடுத்துள்ளது. நாளொரு போராட்டம், பொழுதொரு ஆர்ப்பாட்டம் என அறிவித்து வருகிறது பாஜக.
அந்தவகையில், சின்னமனூரில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் விவசாயிகள் பிரச்சனைக்காகக் களமிறங்கத் தயாராகியுள்ளது பாஜக விவசாய அணி.

சின்னமனூர் விவசாயிகள்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நீர் வழித்தடம் இல்லாத மேடான பகுதிகளுக்கு குழாய்கள் மூலமாகத் தண்ணீர் எடுத்து விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு விவசாயிகள் பயன்படுத்திய தண்ணீர் சட்டவிரோதமாகக் குழாய்கள் அமைத்தும், முல்லைப் பெரியாற்றில் இருந்தும் எடுக்கப்படுவதாகக் கூறி வழக்கு நடந்து வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் 47 குழாய்களை அகற்றினர். இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குடும்பத்தினரே தங்களுக்கு இடையூறு செய்வதாக விவசாயிகள் முறையிட்டனர். வழக்கு கோர்ட்டில் இருப்பதால், வழக்கை சந்தித்துக் கொள்ளுமாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துவிட்டார்.

அமைச்சர் vs விவசாயிகள்
தேனி மாவட்டம் மற்றும் முல்லை பெரியாறு பாசன பகுதிகளில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குடும்பத்தினரின் உரிமையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. அப்பகுதி வழியாக விவசாயிகள் குழாய்களை அமைத்ததன் காரணமாகவே விவசாயிகளுக்கு எதிராக நிதி அமைச்சர் பிடிஆர் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் முல்லை பெரியாறு ஆற்றில் இருந்து தண்ணீர் திருடப்படுகிறது, ஆனால், போர் போட்டு தண்ணீர் எடுத்துச் செல்வதாகக் கூறுகிறார்கள் எனக் கூறுகிறது அமைச்சர் குடும்பம் தரப்பு.

அமித்ஷா ரூட்
இந்த விவகாரம் கடந்த 1 மாதத்திற்கு முன்பு வெடித்த நிலையில், தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளது பாஜக விவசாய அணி. திமுக அரசு, அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கையில் எடுத்து மக்கள் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை கூறியதன் அடிப்படையிலேயே சின்னமனூரில் இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர் அராஜகம்
இதுதொடர்பாக பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சின்னமனூர் பகுதியில் ஆற்றின் கரையிலிருந்து 200 மீட்டர் தள்ளி தனது சொந்த நிலத்தில் சொந்த செலவில் ஆழ்குழாய் கிணறு அமைத்து கண்ணிசேர்வைபட்டி, ஓடைப்பட்டி வேப்பம்பட்டி, முத்தலாபுரம், காமாட்சிபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள 3000த்திற்கும் மேற்பட்ட நிலங்களுக்கு அரசாணை 142(PWD.GO-2014)-ன் படி விவசாயம் செய்துவந்த விவசாயிகளின் 46-க்கும் மேற்பட்ட தண்ணீர் கொண்டு செல்லும் பாசன குழாய்களை உடைத்து மீண்டும் குழாயை இணைக்க முடியாதவாறு கான்கீரிட்டால் மூடி அரசு அதிகாரிகள் உதவியோடு மாபெரும் அராஜகத்தை செய்திருக்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

அமைச்சரின் சொந்த ஊரில்
சில தனிப்பட்டோர் மீதுள்ள தனது விரோதப்போக்கை ஒட்டுமொத்த விவசாயிகள் மீது காட்டி 3,000 ஏக்கர் விவசாய பூமியை தரிசு நிலமாக்கி இருக்கிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். தமிழகம் முழுவதும் இதுபோல் ஆற்றுப்பகுதியிலிருந்து தண்ணீர் கொண்டு செல்வது நடைமுறையிலிருக்கும்போது, அமைச்சரின் சொந்த ஊரில் மட்டும் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவது என்ன காரணமோ? இது இப்படி இருக்க உடனடியாக களத்தில் இறங்கி மாற்றுக்கட்சியினர் போராட வாய்ப்பளிக்காமல் 2,000 விவசாயிகளை ஒன்று திரட்டி போராடி, காணொளி வெளியிட்டு விவசாயம் காப்பதாகக் கூறிய விவசாய சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் போன்றவர்கள் இன்று வரை அப்பிரச்சனைக்கு தீர்வு காணாமல் விவசாயிகளை அலையவிடுவது ஏனோ?

விவசாயிகளுக்கு துரோகம்
விவசாயிகள் போராட்டத்தில் பேசிய விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் போன்றவர்கள் இன்றுவரை அப்பிரச்சனைக்கு தீர்வு காணாமல் குழாய் உடைப்புக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், தேனி மாவட்ட ஆட்சியருமே காரணம். இப்போராட்டம் அரசுக்கெதிரான போராட்டம் அல்ல. முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றால் உடனடியாக தீர்வு காண்பார் என்று கூறியதோடு, இதற்கு அமைச்சர்களோ, முதலமைச்சரோ காரணமல்ல என்று பேசியவர், இன்றுவரை குழாய் உடைப்பு பிரச்சனைக்கு தீர்வு காணாமல் விவசாயிகளை நடுவீதியில் விட்டுச்சென்றது திராவிட மாடல் அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு துணைபோகும் திராவிட மாடல் விவசாய சங்கம் என்பதை பி.ஆர்.பாண்டியன் நிரூபித்திருக்கிறார்.

களமிறங்குகிறது பாஜக
இதுபோன்ற விவசாய சங்கத் தலைவர்கள் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாகக் கூறி அனுகூல சத்துருவாக மாறி, ஆட்சியாளர்களின் கைப்பாவையாக இருப்பது தமிழகத்தில் நீண்டகாலமாக நடந்துவரும் கொடுமையிலும் கொடுமை. சின்னமனூர் விவசாயிகளின் நிலைமையை பாஜக விவசாய அணி உன்னிப்பாக கவனித்து வருகிறது. விரைவில் விவசாயிகளின் இப்பிரச்னைக்கு தீர்வுகாணாவிட்டால் களமிறங்கிப் போராட தயாராகிவிட்டது பாஜக விவசாய அணி. விரைவில் விவசாயிகளுக்கு உண்மையைக்கூறி ஒன்று திரட்டி போராடும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications