கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!
சென்னை: கோடை விடுமுறை முடிந்து மக்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக செங்கல்பட்டு பகுதியில் சுமார் 10 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றிருக்கின்றன. நெரிசல் காரணமாக பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு விடுமுறையின்போதும் சென்னையிலிருந்து செல்லும் வாகனங்களால் நெரிசல் ஏற்படுவதும், விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்பும்போது, நெரிசல் ஏற்படுவதும் வழக்கமான ஒன்றாகத்தான் இருக்கிறது.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வோர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துகின்றனர். இதில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவியும்போதுதான் நெரிசல் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக கார்கள் அதிக அளவில் நெரிசல்களை ஏற்படுத்துகின்றன. போதிய அளவில் அரசு பேருந்துகள் இல்லாதது, புக்கிங் அதிகரிப்பதால் இதுதான் சான்ஸ் என்று ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்துவது இதெல்லாம் கார் பயன்பாட்டை அதிகரிக்க செய்திருக்கிறது.
கார்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், நெரிசல் அதிகமாகி பேருந்துகளில் பயணிக்கும் சாமானிய மக்களும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.












Click it and Unblock the Notifications