நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடும் பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியான உடனேயே அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கின

எத்தனை இடங்கள்
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்பத் தேர்தல் நடத்தப்படுகிறது.

தனித்துப் போட்டி
இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக தேர்தலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டசபைத் தேர்தல், 9 மாநில ஊரக உள்ளாட்சித் தேர்தல் என 3 முக்கிய தேர்தல்களை இரு கட்சிகளும் இணைந்து எதிர்கொண்டிருந்தது. இருப்பினும், இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இதுவரை இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளன.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்
அதன்படி திங்கள்கிழமை இரவு பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை, ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, கோவை, ஓசூர், திருப்பூர், தஞ்சை, திண்டுக்கல், மதுரை, சேலம், திருச்சி, நாகர்கோவில் என மொத்தம் 14 மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல உதகை நாமக்கல், திருச்செந்தூர், ஆம்பூர் உள்ளிட்ட 13 நகராட்சி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணாமலை ட்வீட்
மேலும், பாலக்கோடு, நாட்றம்பள்ளி, கன்னங்குறிச்சி உள்ளிச்ச 8 பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் இதில் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்தத்தில், "மாநகராட்சி வார்டுகளுக்கு 353 பேர், நகராட்சி வார்டுகளுக்கு 129 பேர், டவுன் பஞ்சாயத்துகளுக்கு 119 பேர் அடங்கிய முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அனைத்து மக்களிடமும் எடுத்துச் செல்லும் தூதர்கள் இவர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்!" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications