அசிங்கமாக பேசிய பாஜக கல்யாணராமன்.. "திருமாவின் குடும்பத்தை கூட விட்டுவைக்கல".. போலீசுக்கு போன விசிக
பாஜக கல்யாணராமன் மீது விசிக புகார் தந்துள்ளது
சென்னை: திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பி வரும் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சென்னை கமிஷனர் ஆபீசில் விசிக சார்பில் புகார் தரப்பட்டுள்ளது.
பாஜகவில் சேர்ந்ததில் இருந்தே கல்யாணராமன் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர்.. எப்போதெல்லாம் கல்யாணராமன் பொதுவெளியில் பேசுகிறாரோ, அப்போதெல்லாம் விவகாரம் வெடித்து கிளம்பும்.
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து பேசி, பல்வேறு தரப்பினரிடம் வாங்கி கட்டிக் கொண்டார்.. இதையடுத்து, போலீசாரும் அரை கைது செய்தனர்.

எச்.ராஜா
ஆனால், எச்.ராஜா உடனே ஒரு ட்வீட் போட்டார்.. "ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கத்தக்க விதத்தில் விமர்சித்த இந்துவிரோதி வைரமுத்துவை கைது செய்யாத காவல்துறை கல்யாணராமனை கைது செய்துள்ளது பாரபட்சமானது. கண்டிக்கத் தக்கது" என்றார்.

விமர்சனம்
அதேபோல, அடிக்கடி விசிக தலைவர் திருமாவளவனை தொடர்ந்து இழிவாக பேசி வருவதாக, கல்யாணராமன் மீது விமர்சனம் உள்ளது.. சமீபத்தில் மனுதர்மம் குறித்து எழுந்த விவகாரத்திலும், திருமாவை மோசமாக பேசியிருந்ததாக விசிகவினர் கொந்தளித்தனர்.. அப்போதே அக்கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை கமிஷனர் ஆபீசில் ஒரு புகாரும் தந்திருந்தார்.

திருமாவளவன்
அந்த புகாரில், பாஜக பிரமுகர் கல்யாணராமன் என்பவர், விசிக தலைவரை தனிப்பட்ட முறையில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறார், எல்.முருகன், எச்.ராஜா போன்றோரின் தூண்டுதல் காரணமாகதான் இதுபோன்ற தனிப்பட்ட தாக்குதல்களை கல்யாணராமன் தொடர்ந்து வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.

குடும்பம்
இப்போது மறுபடியும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.. மறுபடியும் கல்யாணராமன் திருமாவை பற்றி அவதூறாக பேசுகிறாராம்.. மறுபடியும் அதேபோல, திருமாவளவனின் குடும்பத்தை பற்றியும் இழிவாக சோஷியல் மீடியாவில் பேசி வருகிறார் என்பதால் அவர் மீது நடவடிக்கை வேண்டும் என்று போலீசுக்கு வந்துள்ளார் வன்னியரசு.

அவதூறு
அவர் அளித்த புகார் மனுவில், "சிதம்பரம் தொகுதி எம்.பி-யும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் குறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த கல்யாணராமன் சமூக வலைதளத்தில் தொடர்ந்து இழிவாகவும் அவதூறாகவும் பதிவுகளை செய்து வருகிறார். சமூக நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கல்யாணராமன் செயல்பட்டு வருகிறார். திருமாவளவனின் குடும்பத்தினர் பற்றியும் அவர் இழிவாக பதிவு செய்து வருகிறார்.

மக்கள்
ஏற்கனவே கல்யாணராமன் மீது கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2 புகார்களை கொடுத்துள்ளோம். ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமூக பிரிவினை உண்டாக்குதல், தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுப்படுத்துதல், தரக்குறைவான அவதூறு செய்திகளை வெளியிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க-வைச் சேர்ந்த கல்யாணராமன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறப்பட்டுள்ளது.

பேட்டி
இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வன்னியரசு, "கல்யாணராமன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் உறுதி தரப்பட்டுள்ளது.. எதிர்கட்சியானாலும் சரி, ஆளுங்கட்சியானாலும் சரி, ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்துகொள்வதே நல்ல அரசியல் சூழலை உருவாக்கும்.. ஆனால், இதுபோன்ற அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதை யாராக இருந்தாலும் கைவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications