தேமுதிகவுடன் விரைவில் பேசுவோம்.. ஓபிஎஸ், தினகரன் ஏற்கனவே கூட்டணியில்தான்! 'ரூட்' பிடித்த நயினார்!
சென்னை: தேமுதிகவுடன் விரைவில் கூட்டணி குறித்துப் பேசுவோம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்த நிலையில், தேமுதிகவுடன் கூட்டணி குறித்து விரைவில் பேசுவோம் என்றும் அதிமுகவை ஒன்றிணைப்போம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற பின், நயினார் நாகேந்திரன் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், "தேமுதிகவுடன் கூட்டணி குறித்து விரைவில் பேசுவோம் என்றும் அதிமுகவை ஒன்றிணைப்போம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் திமுக அரசுக்கு ஒரு மாற்று அரசு வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. கட்சிகள் மத்தியிலும் ஒரு மாற்று அரசு வேண்டும் என்ற மனநிலை இருக்கிறது. 2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். இதுவரை தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இல்லை. வரும் காலத்தில் அமையுமா என பார்க்கலாம்.
என்.டி.ஏ கூட்டணியில்தான் டி.டி.வி தினகரன், ஒ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் இருக்கின்றனர். அதோடு, அ.தி.மு.க-வை ஒன்றினைக்க முயற்சிப்போம். தேமுதிகவுடன் கூட்டணி குறித்து விரைவில் பேசுவோம்" எனத் தெரிவித்துள்ளார் நயினார் நாகேந்திரன்.
ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் கொடுக்காத அதிமுக, வரும் 2026 ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது. வரும் ஜனவரி மாதத்தில், தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பிரேமலதா கூறியுள்ளார். இதனால் கூட்டணி தொடர்பான சலசலப்புகள் நிலவி வருகிறது.
பாமக கட்சி பிரிவதற்கு பாஜக கூட்டணியில் இணைந்தது காரணம் என வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "பாமகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை. அதை நீங்களும் தயவு செய்து இழுக்காதீர்கள்." என்றார்.
கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து கூறிய கருத்தால் ஏற்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, "அவரவர்களுக்கு அவரது தாய்மொழி முக்கியம். இதில் அவர்கள் பேசியது தவறு. இவர்கள் பேசியது என நான் கருத்து சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரையில் எனது தாய் மொழி பெரியது. மாநிலங்களில் ஒற்றுமை வேண்டும் என்பது நூற்றுக்கு நூறு சதவீதம். எல்லா மொழிகளும் ஒன்றாக இருக்க வேண்டும். நமது நாடு, நமது மொழி, நமது தேசியம் என எல்லோருக்கும் வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications