ஒரு மாவட்டமே காலி.. நிர்வாகிகளை கூண்டோடு கலைத்து அதிரடி காட்டிய அண்ணாமலை.. பாஜகவில் பரபர.. பின்னணி?
சென்னை : ராமநாதபுரம் மாவட்ட பாஜகவில் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாக பொறுப்புகள் கலைக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கூண்டோடு கலைப்பு
இராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதுவரை தாங்கள் அனைவரும் கட்சிப் பணியினை தொடர்ந்து செய்யுமாறும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

புதிய மாவட்ட தலைவர்
இதனைத்தொடர்ந்து, உடனடியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தரணி.ஆர்.முருகேசன் புதிய மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார் என்றும் தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துகள் எனவும் கூறி மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. புதிதாக மாவட்ட பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தரணி முருகேசன், ராமநாதபுரம் மாவட்ட பாஜக பொருளாளராகப் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

பொறுப்புக்கு பணம்?
ராமநாதபுரம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் பொறுப்பு நியமனத்திற்கு மாவட்ட தலைவர் பணம் கேட்கும் வகையில் அண்மையில் ஒரு தொலைபேசி உரையாடல் ஆடியோ வெளியானது. ஆனால், இந்த ஆடியோவுக்கும் மாவட்ட தலைவர் இ.எம்.டி கதிரவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் , அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் திட்டமிட்டு சதி செய்ததாகவும் கதிரவன் தரப்பு தெரிவித்தது.

தலைமை அதிரடி
இந்த விவகாரம் மாநில தலைமை வரை சென்ற நிலையில் தான் தற்போது ராமநாதபுரம் மாவட்ட பாஜக பொறுப்புகளை மொத்தமாக கலைத்து மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதோடு, புதிய மாவட்ட தலைவராக தரணி ஆர். முருகேசன் என்பவரையும் நியமித்துள்ளார் அண்ணாமலை. ராமநாதபுரம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications