GetOutStalin: "கெட் அவுட் ஸ்டாலின்" சரியாக 6 மணிக்கு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை
சென்னை: கெட் அவுட் ஸ்டாலின் என்று எக்ஸ் தள பக்கத்தில் நாளை பதிவிடப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், இன்று காலை சரியாக 6 மணிக்கு கெட் அவுட் ஸ்டாலின் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கான எஸ்எஸ்ஏ கல்வி நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு தொடர்ந்து இழுத்தடித்து வந்தது. இதைத்தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து கோரிக்கை வைத்தனர். ஆனால், மும்மொழிக் கொள்கையை முன்வைக்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதியை விடுவிப்போம் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த கருத்துக்கு கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "தமிழகத்தின் உரிமைகளை பறிக்க முயன்றபோது, கடந்த முறை தமிழக மக்கள் Go Back Modi என்று சொல்லி துரத்தி அடித்தார்கள். மீண்டும் இதே போல தமிழ்நாட்டு மக்களிடம் முயன்றால், Go Back Modi என்று சொல்வதற்கு பதிலாக, 'Get Out Modi' என்று கூறி துரத்துவார்கள்" என்று கூறியிருந்தார்.
கெட் அவுட் மோடி என்று துரத்துவார்கள் என்று உதயநிதி பேசியதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து பேசிய அண்ணாமலை, உலக நாடுகள் சிவப்பு கம்பளம் விரித்து பிரதமர் மோடியை வரவேற்பதற்காக கைகட்டி காத்திருக்கிறார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் அவரை விமர்சிக்கிறார்கள். உங்களால் முடிந்தால் Get Out Modi என சொல்லி பாருங்கள் என்று சவால் விட்டிருந்தார். துணை முதல்வரின் வீடு முற்றுகையிடப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த உதயநிதி, வீட்டைதானே முற்றுகையிடப் போகிறார்கள்? வரச்சொல்லுங்கள். நான் வீட்டில்தான் இருப்பேன். மாலை ஒரு நிகழ்ச்சியிருக்கிறது. முடித்துவிட்டு வரப்போகிறேன் என்று அசால்டாக பதிலளித்தார். இதற்கு அண்ணாமலை, "நாளை காலை நான் Get Out Stalin என ட்வீட் பதிவிட போகிறேன். அது எவ்வளவு போகப்போகிறது என்று நீங்களே பாருங்கள்" என கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் (FSO-TN) மாநிலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், இளைஞர்களும், மாணவர்களும் 'Get Out Modi' என்று முழக்கமிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது.
இன்று காலை 6 மணிக்கு கெட் அவுட் ஸ்டாலின் என்று ட்வீட் போடவுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் அறிவித்திருந்தார். அதன்படி கெட் அவுட் ஸ்டாலின் என்று இன்று பதிவிட்டுள்ளார். மேலும், எங்களை விட அதிகமாக ட்வீட் போட முடியுமா என்றும் அவர் சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், சரியாக காலை 6 மணிக்கு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, எல்லாவற்றிலும் ஊழல், சட்டம் ஒழுங்கை சீர்கெடுத்தது, தமிழகத்தை போதைப் பொருள் மற்றும் கள்ளச் சாராயத்தின் புகழிடமாக மாற்றியது, கடன்களை அதிகரிக்கச் செய்தது, பழமையான கல்வித் துறை அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சமூகம், சாதி மதத்தை வைத்து அடிப்படைவாத அரசியலை பிளவு செய்தது, தொடர்ந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கத் தவறியது, தோல்வியடைந்த திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை விரைவில் மக்கள் வெளியேற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications