சேகர்பாபுவுக்கு சப்போர்ட்.. அவங்க இருந்தா இப்படி பேசியிருப்பாரா? செல்லூர் ராஜூவுக்கு அண்ணாமலை கேள்வி
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்த நிலையில், "முன்னாள் ஆளுமை இருந்திருந்தால் திமுக அமைச்சரை பாராட்டியிருப்பாரா?" என செல்லூர் ராஜூக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்து அறநிலையத்துறையே கூடாது என்பதுதான் பாஜகவின் கொள்கை. இப்படி இருக்கையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சானதன ஒழிப்பு மாநாட்டில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றிருந்து பெரும் விவாதமாக வெடித்தது. தமிழக அரசுக்கு எதிராக இந்த அஸ்திரத்தை கையில் எடுத்த பாஜக, சேகர்பாபுவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் குதித்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று திருச்சியில் 'என் மண் என் மக்கள்' யாத்திரையில் பங்கேற்று பேசியிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "சனாதனத்தை தமிழகத்தில் உயா்த்திப் பிடிக்கும் ஒரே கட்சி பாஜகதான். சனாதனத்தை ஒழிக்கும் கும்பலிடமிருந்து மக்களைக் காப்பாற்ற அரசியல் மாற்றம்தான் ஒரே தீா்வு. அதற்கு, வரும் மக்களவைத் தோ்தலில் திருச்சி தொகுதியில் அரங்கராஜன் குமாரமங்கலத்தை போல, மீண்டும் பாஜகவை வெற்றி பெறச் செய்து, மோடியை பிரதமராக்க வேண்டும்.
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது. மக்களின் உணா்வுக்கேற்ப பாஜக இதனை செயல்படுத்தும். திமுகவின் தோ்தல் வாக்குறுதியான ஸ்ரீரங்கத்தில் வாகன நிறுத்தமிடம், பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் நிறைவேற்றப்படும்" என்று பேசினார்.
இவரது பேச்சுக்கு அதிமுக தரப்பிலிருந்தே பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது "அறநிலையத் துறை தொடர்ந்து செயல்பட வேண்டும். பெரிய கோயில்களின் வருவாயில்தான் சிறு கோயில்கள் செயல்படுகின்றன. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார். அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத் துறையை கலைக்க முடியுமா?" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வியெழுப்பினார்.
இந்நிலையில் இன்று இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, "திமுகவுக்கு பகையாளியாக பாஜக மட்டும்தான் இருக்கிறது. மற்றவர்கள் எல்லாம் பங்காளிகளாக இருக்கின்றனர். ஒரு கட்சியினுடைய முன்னாள் அமைச்சர், இன்னொரு கட்சியினுடைய இந்நாள் அமைச்சருக்கு சிறப்பாக செயல்படுவதாக சர்டிஃபிகேட் கொடுக்கிறார். தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுமைகள் இருந்திருந்தால் இவர்கள் இப்படி பேசியிருப்பார்களா?" என்று பதில் கேள்வியை எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications