AI வந்துவிட்டது.. மும்மொழி தேவையா? வந்துவிழுந்த கேள்வி.. டக்கென கன்னடத்தில் பதில் சொன்ன அண்ணாமலை
சென்னை: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய போது, திடீரென ஏஐ போன்ற தொழில்நுட்பம் இருக்கும் போது, எதற்காக 3வதாக ஒரு மொழியை கற்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உடனடியாக அண்ணாமலை, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பேசி கேள்வி எழுப்பி, அதற்கு ஏஐ மூலம் மொழிமாற்றம் செய்து பதில் அளிக்குமாறு சவால் விடுத்த சம்பவம் நடந்துள்ளது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிலுவையில் உள்ள நிதி விடுவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மத்திய அரசு இந்தியை திணிக்க கூடாது என்று கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். அதேபோல் புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜயும் இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தவெக தலைவர் விஜய்-க்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். அதில் அண்ணாமலை பேசுகையில், அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த இருமொழிக் கொள்கையை திமுக அரசு பின்பற்றுகிறது. புதிய கல்விக் கொள்கையில் இந்தியை ஒருபோதும் திணிக்கவில்லை.
மும்மொழிக் கொள்கையில் இந்தி திணிக்கப்படாது. தனியார் பள்ளிகளில் இருப்பதை போல் பல மொழிகளை பார்க்கும் வாய்ப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இல்லை. விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் நடிகர் விஜய் கூட சிபிஎஸ்சி பள்ளியை நடத்தி வருகிறார். விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பெயரிலான அறக்கட்டளையின் கீழ் அந்தப் பள்ளி இயங்குகிறது.
உங்களுக்கு ஒரு நியாயம்? மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினர் சிபிஎஸ்சி பள்ளியை நடத்துகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் இந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட பாடங்களை படிக்கிறார்கள் என்று தெரிவித்தார். இதனிடையே ஏஐ போன்ற தொழிற்நுட்பம் வந்த பின்னரும் இத்தனை மொழிகளை மாணவர்கள் படிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அண்ணாமலை உடனடியாக, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பதில் அளித்தார். அந்த பதில்களை உடனடியாக ஏஐ தொழில்நுட்பத்தில் போட்டு பதில் அளிக்குமாறு கேட்டார். தொடர்ந்து, சாப்பிட வேண்டும் தலைவா.. பார்டர் தாண்டினால் போர்டு பார்த்து படிக்க வேண்டும் அண்ணே.. ஒரு மணி நேரத்திற்கு பின் ஏஐ-ல் பதில் கிடைத்து பிரயோஜனமில்லை என்று தெரிவித்தார். மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக திடீரென கன்னடம் மற்றும் இந்தியில் அண்ணாமலை பேசியது அக்கட்சியினரால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications