தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் கிளம்பும் நயினார் நாகேந்திரன்.. 12 ஆம் தேதி மதுரையில் தொடக்கம்!
சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். முதற்கட்ட சுற்றுப்பயணம் வரும் 12 ஆம் தேதி மதுரையில் தொடங்கி, தூத்துக்குடியில் நவம்பர் 22 அம் தேதி நிறைவு பெறுகிறது. 2 ஆம் கட்ட சுற்றுப்பயணம் நவ. 24 தேனியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில் அக்டோபர் 12 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி சுற்றுப்பயணம் தொடங்க உள்ளதாகவும், நீதிமன்ற விதிமுறைப்படி சுற்றுப்பயணம் நடைபெறும் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், "கரூர் உயிரிழப்பு குறித்து பாஜக நாடாளுமன்ற குழு ஆய்வு செய்துள்ளது. அந்த அறிக்கையை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லும் அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அக்டோபர் 12 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளேன். நீதிமன்ற விதிமுறைப்படி சுற்றுப்பயணம் தொடங்கும்.
முதற்கட்ட சுற்றுப்பயணம் வரும் 12 ஆம் தேதி மதுரையில் தொடங்கப்படும், முதற்கட்ட சுற்றுப்பயணம் தூத்துக்குடியில் நவம்பர் 22 ஆம் தேதி நிறைவு பெற்று, 2 ஆம் கட்ட சுற்றுப்பயணம் நவம்பர் 24 தேனியில் தொடங்கும்.
கரூர் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் குழுவை அமைத்தது நல்ல விஷயம் தான். தமிழக முதல்வர் கரூரில் நடைபெற்ற சம்பவத்திற்கு இதுவரை வருத்தம் தெரிவித்துள்ளாரா? அவர் எந்த அடிப்படையில் பாஜகவை ஒட்டுண்ணி என்று சொல்கிறார். முதல்வர் 41 பேர் உயிரிழந்ததை இல்லை என்று சொல்கிறாரா அல்லது அவருடைய ஆட்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று சொல்கிறாரா அல்லது அதையெல்லாம் மறைக்க இதுபோன்று சொல்கிறாரா என்று தெரியவில்லை.
கரூரில் இரவு நடந்த நிகழ்ச்சியில் ஏன் மின்தடை ஏற்பட்டது, தவெக கேட்ட இடத்தில் ஏன் அனுமதி கொடுக்கவில்லை. எந்த அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும் மின் தடை, காவல்துறை தடியடி, செருப்பு வீசுவதை முதலமைச்சர் அனுமதிப்பாரா? சம்பவம் நடந்த அரை மணி நேரத்தில் முதலமைச்சர் எப்படி வர முடியும்?. இரவோடு இரவாக சடலங்களுக்கு எப்படி உடற்கூராய்வு நடந்தது?
தவறு செய்பவர்களை காப்பாற்ற பாஜக ஒன்றும் நீதிமன்றம் கிடையாது. நீதிமன்றமும் நேர்மையான தீர்ப்பை வழங்க வேண்டும். திமுக இன்று மக்களின் வெகுஜன விரோதியாக மாறி உள்ளது, மக்களின் நன்மதிப்பை பெரிதும் இழந்துள்ளது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் ஒரு இடத்தில் டெபாசிட் கூட வாங்குமா என தெரியாது. 2011 இல் மிகப்பெரிய கூட்டணியை கருணாநிதி வைத்தபோதும் அதிமுக தான் வெற்றி பெற்றது. கூட்டணி பலத்தோடு இருக்கின்ற மாயையை திமுக உருவாகி உள்ளது, அதனை 2026 தேர்தலில் மக்கள் முறியடிப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications