"இந்துத்துவாவுக்காக எதையுமே செய்யவில்லை.. ராமர் கோயிலை கட்ட எதிர்த்தவரே மோடிதான்.. " சு.சுவாமி பரபர
அயோத்தி ராமர் கோயில் குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறிய தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி குறித்தும் சுப்பிரமணியன் சுவாமி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
பாஜகவின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணியன் சுவாமி தொடர்ச்சியாகப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இதற்கிடையே தலைநகர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடி குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். குறிப்பாக ராமர் கோயில் விவகாரம் குறித்தும் சில முக்கிய கருத்துகளைக் குறிப்பிட்டார்.

சுப்பிரமணியன் சுவாமி
சென்னையில் தனியார் அமைப்பு சார்பில் உலகிற்கு இந்தியா விஸ்வகுருவாக இருக்க முடியுமா என்ற தலைப்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய சுப்பிரமணியன் சுவாமி, "பிரதமர் நரேந்திர மோடி இந்துத்துவாவுக்கு எதுவுமே செய்யவில்லை.. இந்துத்துவாவுக்கு பிரதமர் மோடியின் பங்களிப்பு ஜீரோ மட்டுமே.. ராமர் கோயிலை மோடி கடைசி வரை எதிர்த்தார்" என்று குறிப்பிட்ட அவர், அது குறித்தும் விரிவாகப் பேசினார்.

ராமர் கோயில்
சுப்பிரமணியன் சுவாமி மேலும் கூறுகையில், "ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, அவர் (பிரதமர் மோடி) தனது நண்பரான குருமூர்த்தியை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வைத்தார்.. கோயில் கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதையே பிரதமர் மோடி விரும்பினார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியில் நிலம் தேசியமயமாக்கப்பட்டதை நாம் மறைந்துவிடக் கூடாது.

ராணுவ பதிலடி
எனக்கும் பிரதமர் மோடிக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவொரு கருத்து வேறுபாடுகளும் இல்லை.. அதேநேரம் பிரதமர் மோடி சீனா மற்றும் பொருளாதார விவகாரங்களை எப்படி கையாள்கிறார் என்பதில் எனக்குப் பெரியளவில் உடன்பாடு இல்லை.. நாம் உலகிற்கு விஸ்வகுருவாக இருக்க முடியுமா என்று கேட்கிறீர்கள்.. எல்லைப் பிரச்சினையில் சீனாவுக்கு நாம் எப்போது ராணுவ ரீதியாகப் பதிலடி கொடுக்கிறோமோ.. அப்போது தான் இந்தியா விஸ்வகுருவாக முடியும். விஸ்வகுருவாக மாற புத்திசாலித்தனம் தேவை..

விஸ்வகுரு
குருக்கள், சாதுக்கள் மற்றும் சன்யாசிகள் ஆகியோர் தார்மீக, ஆன்மீகம் உள்ளிட்ட ஆறு வகையான ஆற்றலைக் கொண்டிருக்கிறார்கள்.. நவீனத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியா மற்ற நாடுகளை விட முன்னணியில் இருந்தது.. விமான சாஸ்திரம் என்று ஒரு புத்தகத்தைப் பார்த்திருக்கிறேன். அதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அதில் அவர்கள் எப்படி விமானத்தை உருவாக்க வேண்டும் எப்படிப் பறக்க வேண்டும்.. எந்த எரிபொருளை உபயோகிக்கலாம் என்பதை விளக்கியிருந்தனர். பாதரசத்தை விமான எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டு இருந்தனர்..

விமான எரிபொருள்
நான் ஒரு வல்லுநரிடம் விமான எரிபொருளாகப் பாதரசத்தைப் பயன்படுத்த முடியுமா என்று கேட்டேன்.. வரும் காலத்தில் அதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும், நாம் அதில் நீண்ட காலம் செல்ல வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இது மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் நீங்களே பார்க்கலாம்.. நாம் பல நாடுகளைக் காட்டிலும் முன்னிலையில் தான் இருந்துள்ளோம். அவற்றை மீண்டும் கொண்டு வந்தாலேயே நாம் விஸ்வகுருவாக மாற முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

பரபரப்பு
இதில் சுப்பிரமணியன் சுவாமி பல விவகாரங்கள் குறித்துப் பேசியிருந்தாலும் கூட ராமர் கோயில் விவகாரம் குறித்து அவர் குறிப்பிட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஏனென்றால் பாஜக அரசின் மிகப் பெரிய ஒரு சாதனையாக இந்த ராமர் கோயில் பார்க்கப்படுகிறது. கடந்த 2020இல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். விறுவிறுப்பாகக் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், இந்த கோயில் அடுத்தாண்டு தொடக்கத்தில் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications