கோயில் நிதி மோசடி வழக்கு.. ரூ.30.77 லட்சம் தர ரெடி! ஐகோர்டில் பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் மனு
சென்னை: பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலின் பெயரில் சுமார் ரூ.33.28 லட்சம் வசூல் செய்து மோசடி செய்ததாக கைதான பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் ரூ.30.77 லட்சத்தை கோயிலுக்கு தந்துவிடுவதாக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.
இளைய பாரதம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு பாஜக தலைவர்களுடன் இவர் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வது வழக்கம்.
இவர் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் பெயரை பயன்படுத்தி இணையதளத்தில் கிரவுட் ஃபண்டிங் மூலம் 34 லட்சம் ரூபாய் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக கடந்த மே 30 ஆம் தேதி ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சிறுவாச்சூர் கோயில்
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் அமைந்து உள்ளது புகழ்பெற்ற மதுரகாளியம்மன் கோயில். இங்குள்ள பழுதடைந்த சிலைகளை சீரமைத்து தருவதாகக் கூறி பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் இணையதளத்தில் நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்டதாக கோயில் செயல் அலுவலர் அரவிந்தன் புகார் அளித்தார்.

கைது
அதன் அடிப்படையில் சென்னை ஆவடி மிட்னமல்லியை சேர்ந்த யூடிபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை ஆவடி மத்திய குற்றவியல் போலீசார் கைது செய்தனர். அவரிடம் ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

15 நாள் நீதிமன்ற காவல்
அதன் முடிவில் கார்த்திக் கோபிநாத் மீது 420, 406 மற்றும் 66(d) IT Act தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டன. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கார்த்திக் கோபிநாத்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

ஜாமீன்
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கார்த்திக் கோபிநாத் தரப்பில் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து அவரது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து கடந்த மே 29 ஆம் தேதி அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ரத்து செய்யக்கோரி மனு
இதனையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்திக் கோபிநாத் மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோயில் திருப்பணி என்ற பெயரில் மிலாப் செயலி மூலம் ரூ.33,28,924 நிதியை வசூலித்து உள்ளதாகவும், அதிலிருந்து சுமார் ரூ.1.80 லட்சம் வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உத்தரவு மீறல்
கோவில் செயல் அலுவலர், கோயில் திருப்பணிக்களுக்காக தனி நபர் நன்கொடை வசூலிக்கக் கூடாது எனவும், அவ்வாறு வசூலித்து இருந்தால் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென நோட்டீஸ் அனுப்பியும் கார்த்திக் கோபிநாத் பணம் வசூலித்து உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.

வெளிநாட்டு நிதி
கார்த்திக் கோபிநாத் வெளிநாடுகளில் இருந்து பணம் வசூலித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதால் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் மீறப்பட்டுள்ளது குறித்தும் விசாரணை நடத்த இருப்பதாகவும் பதில் மனுவில் காவல்துறையில் கூறி இருந்தது.

புதிய மனு
வழக்கின் விசாரணை ஆரம்பகட்ட நிலையிலேயே உள்ளதால் கார்த்தி கோபிநாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என காவல்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தான் வசூலித்த நிதியில் ரூ.30.77 லட்சத்தை கோயிலுக்கு வழங்கிவிடுவதாக கார்த்திக் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.

நன்கொடையாளர்
ரூ.2.57 லட்சத்தை வழங்கியவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டதால் மீதமுள்ள தொகையை வழங்குவதாகவும், தன்னை நன்கொடையாளராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அங்கீகரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications