நடிகர் விஜய் பற்றி இழிவாக ட்வீட் போட்ட வழக்கு.. உமா கார்கியை மீண்டும் கைது செய்த சென்னை போலீசார்!
சென்னை: பாஜக ஆதரவாளர் உமா கார்கி, திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கோவை போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் விஜய் பற்றி இழிவாக ட்வீட் செய்த வழக்கில் மீண்டும் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்கி. இவர் பாஜகவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கருத்துகளை பதிவிட்டு வந்தார். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையும், திமுக தலைவர்களையும் கடுமையான சொற்களால் விமர்சித்தும் வந்தார்.

சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை உமா கார்கிக்கு அண்மையில் விருது வழங்கியிருந்தார். இந்த நிலையில், பெரியார், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறு அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக திமுகவினர் அளித்த புகாரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் உமா கார்கியை அண்மையில் கைது செய்தனர்.
சமூக வலைதளங்களில் திமுக தலைவர்கள் குறித்தும், முதல்வர் ஸ்டாலின் குறித்தும் அவதூறு பரப்பிய பாஜக ஆதரவாளர் உமா கார்கியை 15 நாட்கள் சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், நடிகர் விஜய் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக உமா கார்கி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜய் குறித்தும் தந்தை பெரியார் குறித்தும் இழிவாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக உமா கார்கி மீது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உமா கார்கியை கைது செய்தனர். கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமா கார்கி தற்போது சென்னை அழைத்துச் செல்லப்பட்டிள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications