அண்ணாமலை ரிட்டர்ன் எப்போது? வந்ததுமே கட்சி வேலையில் “பிஸி”.. விஜய்யும் உள்ளே.. அனல் பறக்கப்போகுது!
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்ற நிலையில், வரும் நவம்பர் 28 ஆம் தேதி அவர் தமிழ்நாட்டுக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னைக்கு வரும் அடுத்த நாளே கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறாராம் அண்ணாமலை.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத காலம் சர்வதேச அரசியல் புத்தாக்கப் படிப்பை படிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதற்கு முந்தைய நாள் இரவு, முதலீடுகளை ஈர்க்கும் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற நிலையில் அண்ணாமலை அடுத்த நாள் லண்டன் புறப்பட்டுச் சென்றார். மேற்படிப்பு மேற்கொள்வதோடு லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொண்டு வருகிறார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றதால், இங்கு கட்சிப் பணிகளை ஒருங்கிணைத்து வழிநடத்த ஒருங்கிணைப்பு குழு ஒன்றை பாஜக தலைமை அமைத்தது. தமிழக பாஜகவின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வழிநடத்த தேதிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில், மாநில துணை தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, பி.கனகசபாபதி, பொதுச் செயலாளர்கள் எம்.முருகானந்தம், பேராசிரியர் ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், லண்டன் சென்றுள்ள அண்ணாமலை, அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 28 ஆம் தேதி சென்னை வரும் அண்ணாமலை, நவம்பர் 29 ஆம் தேதி சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பார் என்றும், டிசம்பர் 1 ஆம் தேதி கோவையில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அவற்றைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் அண்ணாமலை பங்கேற்க இருக்கிறார். மேலும், 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், மாநிலம் தழுவிய சுற்றுப் பயணத்தையும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளாராம். கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக,'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று நடைபயணம் மேற்கொண்டிருந்தார் அண்ணாமலை.
தற்போது, அதேபோல, 234 தொகுதிகளிலும், கிராமப் புறங்களை குறிவைத்து பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள கிராமங்களுக்கும் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, முதல் அரசியல் மாநாட்டை கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு அரசியல் களத்தை அதிர வைத்தது. இந்நிலையில், நவம்பர் 28 ஆம் தேதி அண்ணாமலை தமிழகம் திரும்புவதால், இனி தமிழக அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே கூறலாம்.
அண்ணாமலை தமிழ்நாட்டில் இல்லாத இந்த சில மாதங்களில் பாஜக பெரிதாக சீனில் இல்லை. சென்னை கனமழையின்போதும் பாஜக பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. இந்தச் சூழலில் அண்ணாமலை திரும்பி வந்ததும், தமிழக அரசியல் களத்தில் பாஜகவையும் ஆக்டிவ் ஆக்குவார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் பாஜக தொண்டர்கள்.












Click it and Unblock the Notifications