நீங்க போட்டிபோடாதீங்க.. 9 தொகுதிகளுக்கு ஆப்பு? அதிமுகவிற்கு ஆணி அடிக்கும் பாஜக.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் லோக்சபா தேர்தலில் போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளதாம். இதனால் அதிமுகவிற்கு முக்கியமான பிரஷர் ஒன்றை கொடுக்கவும் பாஜக முடிவு செய்துள்ளதாம்.
தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி பிரிவால் உட்சபட்ச அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த குழப்பம் காரணமாக அண்ணாமலைக்கு ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டு இருக்கிறது. டெல்லியில் அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்த பல்வேறு கூட்டங்களில் , ஆலோசனைகளில் அண்ணாமலை கலந்து கொண்டார்.

சமீபத்தில் பிஎல் சந்தோஷ் உடனும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனைகளில் தமிழ்நாட்டில் பாஜக 9 இடங்களில் போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாம். கோவை, ஈரோடு, திருப்பூர், வேலூர், தென் சென்னை, சிவகங்கை, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 தொகுதிகளில் பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை இதை வெளிப்படையாகவே தொகுதி குறிப்பிடாமல் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
பாஜக பிளான் என்ன?: கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்சென்னையில், வேலூர் இதெல்லாம் பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் தொகுதிகள் என்று நினைக்கிறார்கள். இங்கே முன்பு பாஜக தலைவர்கள் போட்டியிட்டு உள்ளனர். சில கணிசமான வாக்குகளை பெற்றுள்னனர். இந்த முறை அவர்கள் தூத்துக்குடியில் போட்டியிடவில்லை.

அதற்கு பதிலாக இந்த முறை தென்காசியில் கூட அவர்கள் நிற்க வாய்ப்பு உள்ளது. தேவேந்திரகுல வேளாளர் வாக்குகளை கவர வேண்டும் என்று அவர்கள் தென்காசியில் போட்டியிட முடிவு செய்துள்ளனர், அங்கே வெற்றிபெற முடியும் என்று அவர்கள் நினைப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சிவகங்கை, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி இங்கே எல்லாம் அவர்கள் தோல்வி அடைந்தாலும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளனர். மத ரீதியாக, ஜாதி ரீதியாக பிரிவு உள்ள இடங்களில் வாக்குகளை பெற பாஜக முயன்று வருகிறது. அதை மனதில் வைத்தே இந்த முடிவை பாஜக எடுத்துள்ளது. சர்வே எடுத்துதான் அவர்கள் இதை தேர்வு செய்துள்ளனர் என்று பாஜக தரப்பு கூறியுள்ளது.
அதிமுக வலிமை?: இங்கே அதிமுகவும் வலிமையாக உள்ளது. இந்த நிலையில்தான் இங்கே அதிமுகவை போட்டியிட வேண்டாம் என்று சொல்ல டெல்லி பாஜக முயன்று வருகிறதாம். அதாவது தமிழ்நாட்டில் 9 இடங்களில் நாங்கள் கண்டிப்பாக போட்டியிட உள்ளோம். இங்கே நீங்கள் போட்டியிட்டால் வாக்குகள் பிரியும்.

நாம் கூட்டணியில் இருக்க வேண்டும். கூட்டணியில் இருந்தால் இந்த 9 இடங்களை கொடுங்கள். இல்லையென்றால் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டாம். இந்த 9 தொகுதியில் விட்டுக்கொடுங்கள். எங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுங்கள் என்ற அழுத்தத்தை பாஜக அதிமுகவிற்கு எதிராக வைக்க உள்ளதாம்.
இங்கே எல்லாம் அதிமுக - பாஜக பிரிந்து நின்றால் அது திமுகவிற்குத்தான் சாதகமாக மாறும். அதனால் அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைய வேண்டும். இதனால்தான் அவர்கள் மீண்டும் சேர வேண்டும். இல்லையென்றால். இங்கே பாஜக தனியாக மட்டுமே வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.. அதிமுக ஒருவேளை வேட்பாளர்களை நிறுத்தினாலும் பலமில்லாத வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று பாஜக அதிமுகவிற்கு பிரஷர் கொடுக்க உள்ளதாம்.












Click it and Unblock the Notifications