கூட்டணி கட்சி தலைவருக்கு எதிராகவே தீர்மானம்.. “விந்தையிலும் விந்தை” : அதிமுகவுக்கு சேகர் அட்வைஸ்!
சென்னை : ஜெயலலிதா பற்றி அண்ணாமலை தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக அதிமுகவினர் கொந்தளித்து வரும் நிலையில், பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், அதிமுகவினருக்கு அறிவுரை கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்துப் பேசியிருந்தார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் ஊழல் தலைவிரித்து ஆடியதாகவும், முன்னாள் முதலமைச்சர்களை குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்ததாகவும் கூறியிருந்தார்.

ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்து அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் காட்டமாக பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவினர் அண்னாமலைக்கு எதிராக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவினரும் அதற்கு எதிர்வினை ஆற்றி வருவதால் இரு கட்சிகள் இடையே கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினுடைய ஒரு அங்கம் மற்றொரு அங்க கட்சியினுடைய தலைவரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பது விந்தையிலும் விந்தை! அதிசயத்திலும் அதிசயம்! கூட்டணி கட்சி என்பது வீடுகளில் ஆண் பெண் திருமணத்திற்காக சம்பந்தம் பேசுவது போன்றது அல்ல!
திருமணம் பேசும்போது மூன்று தலைமுறைகள், தாய் தகப்பன் அண்ணன் தம்பி மாமன் மச்சான் தொழில் மற்றும் குணாதிசயங்கள் படிப்பு பண வசதி என்பன எல்லாம் விரிவாக அலசி விவாதிக்கப்படும். ஆனால் கட்சிகளின் கூட்டணிகளில் இதைப்போல் இல்லை.
வெற்றி பெறும் வாய்ப்பு, மக்கள் ஆதரவு, சட்டமன்ற பாராளுமன்றத்தில் கட்சியினுடைய எண்ணிக்கை, கட்சியின் வலிமை, இவைகளோடு ஒத்துப்போகும் தன்மை இவை களை அடிப்படையாகக் கொண்டு கூட்டணிகள் ஏற்படுகிறது. இதில் லட்சியங்கள், சித்தாந்தங்கள், செயல்பாடுகள், தலைமை - இவை
எல்லாம் கட்சிக்கு கட்சி மாறுபடும்.
இந்நிலையில் சரித்திரத்தை சுட்டிக்காட்டி பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னதை குற்றமாக எடுத்து குறை கண்டு கண்டன தீர்மானம் நிறைவேற்றுவது முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடு. உறவு பலப்பட வேண்டும், கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணம் அதிமுகவுக்கு இருக்குமானால் இப்படி செய்திருப்பது கூடாது இந்த சம்பவம் ஒரு துரதஷ்டமே! அதிமுக தலைவர்கள் இதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications