ஏஆர் ரஹ்மான் மதவாதியா? பாஜக நிர்வாகி சொன்ன ஒற்றை வார்த்தை! கிளம்பிய எதிர்ப்பு.. பரபரக்கும் ‛எக்ஸ்’
சென்னை: ஆஸ்கர் விருது நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் நேற்று நடத்திய இசைக்கச்சேரி பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், பாஜக நிர்வாகி எஸ்.ஆர்.சேகர் இது குறித்து கூறியுள்ள கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனித கண்டுபிடிப்புகளில் இசை மிகப்பெரிய சாதனை என்றே சொல்லலாம். இந்த இசையை பெரும்பாலும் ரேடியோ, மொபைல், டிவிகளில் கேட்டு புளித்துப்போனபோது நேரடி சினிமா இசைக்கச்சேரிகள் தொடங்கின. அந்த வகையில் பல்வேறு இசையமைப்பாளர்கள், பாடகர்கள் அவ்வப்போது லைவ் இசைக்கச்சேரியை நடத்துவதுண்டு. இதன் தொடர்ச்சியாக ஏ.ஆர்.ரஹ்மானும் சென்னை ஈசிஆரில் இசைக்கச்சேரி ஒன்றை நேற்று திட்டமிட்டிருந்தார்.

ஏற்கெனவே ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி நடக்க இருந்த இந்த இசைக்கச்சேரி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இதற்காக ரூ.2,000 சில்வர், ரூ.5,000 கோல்டு மற்றும் ரூ.10,000 பிளாட்டினம் என மூன்று விதமாக டிக்கெட்டுகள் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் டிக்கெட்டுகளுக்கு ஏற்ப போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
போக்குவரத்து வசதிகள் தொடங்கி, இருக்கைகள் ஒதுக்குவது வரை வசதிகள் செய்யப்படாததால் பலர் கடுமையான நெரிசலில் சிக்கி தவித்துள்ளனர். குறிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு பெண்களும், குழந்தைகளும் வந்திருந்த நிலையில், இவர்கள் கூட்ட நெரிசலில் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பலரும் தாங்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து சோஷியல் மீடியாக்களில் விமர்சித்திருந்தனர். மற்றொருபுறம் இந்த வழியாக சென்ற முதலமைச்சர் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்துள்ளது.
இது எல்லாமும் சேர்ந்து கடும் விமர்சனங்களாக எழுந்த நிலையில், இந்த தவறுக்கு முழு பொறுப்பேற்பதாக ரஹ்மான அறிவித்துள்ளார். அதேபோல பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பிரதானமானது என்றும், இது இங்கிருந்தே தொடங்கட்டும் எனவும் இதற்காக தானே பலி ஆடு ஆவதாகவும் கூறியுள்ளார். இது தவிர நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்களின் நிலைமையை ஆராய்ந்து உரிய தீர்வு வழங்கப்படும் என்றும், இதற்காக பங்கேற்பாளர்கள் தங்கள் டிக்கெட்டுகளை மெயில் செய்யலாம் எனவும் ரஹ்மான் கூறியுள்ளார்.

ரஹ்மானின் வார்த்தைகள் ஆறுதல் அளித்துள்ள நிலையில், பாஜக நிர்வாகிகள் சிலர் ரஹ்மான் நிகழ்ச்சி குறித்து மத ரீதியிலான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், "ரகுமான் முழுக்க முழுக்க மதவாதி. அவருக்குள் இருக்கும் இசை பொதுவானது. அவர் செயல் சிந்தனை மதமானது. பொதுவானதை கேட்க செல்லும்போது மதவாதியின் மனம் செயல்படுகிறது. விளைவு பொதுவான இந்துக்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இப்போதாவது அதை புரிந்து கொள்கிறீர்களா? யாரை, எங்கே, எப்படி, வைக்க வேண்டும் என இனியாவது தெரிந்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.
இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் எஸ்ஆர் சேகருக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். நேற்று நடந்த சம்பவத்துக்கு ஏஆர் ரஹ்மான் பொறுப்பு ஏற்க வேண்டும். அதேவேளையில் அதனை காரணம் காட்டி மதவாதி என விமர்சனம் செய்வது சரியல்ல என எஸ்ஆர் சேகருக்கு பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications