குடியரசுத் தலைவரை அவமானப் படுத்திட்டாரே முதல்வர்.. அதுவும் ‘கடைசி’ ரேங்க்.. கொதித்த வி.பி.துரைசாமி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடைசி ரேங்க் அமைச்சரை அனுப்பி குடியரசுத் தலைவரை அவமானப்படுத்தியதாக வி.பி.துரைசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாட்டுக்கு வருகை தந்த போது முதலமைச்சர் ஸ்டாலின் அவரை நேரில் சென்று வரவேற்காமல் அவமானப்படுத்தியுள்ளார் என தமிழ்நாடு பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு 2 நாள் பயணமாக வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றார்.
தமிழ்நாட்டுக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பாஜக போராட்டம்
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபு கொலையைக் கண்டித்தும், தமிழ்நாட்டில் சட்டம் ஓழுங்கு சீர் கெட்டுள்ளதாக குற்றம்சாட்டி திமுக அரசை கண்டித்தும் தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் பாஜக நிர்வாகிகள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

குடியரசு தலைவரை அவமானப்படுத்தியுள்ளார்
இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது பேசிய தமிழ்நாடு பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, நமது பிரதமர் நரேந்திர மோடி, உலகில் யாரும் செய்ய முடியாத ஒரு பெரும் சாதனையைச் செய்தார். ஒரிசா மாநிலத்தில் வாழும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை, 150 கோடி இந்திய குடிமக்களின் தலைவராகத் தேர்வு செய்தார். அப்படிப்பட்ட திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக திமுகவினரும், திமுக கூட்டணி கட்சிகளும் வாக்களிக்கவில்லை.

கடைசி ரேங்க் அமைச்சர்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்த போது ஆளுநர் சென்று வரவேற்றிருக்கிறார். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்காமல் அவரை அவமானப்படுத்தியுள்ளார். அமைச்சர்கள் பட்டியலில் புரோட்டாகாலில் கடைசி ரேங்கில் உள்ள மனோ தங்கராஜை வரவேற்க அனுப்பி, குடியரசுத் தலைவரை அவமதித்துள்ளார்" எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

குடியரசுத் தலைவர் விசிட்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை தந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் அவரை வரவேற்க, முதலமைச்சர் ஸ்டாலினோ, மதுரையைச் சேர்ந்த அமைச்சர்களோ செல்லவில்லை. கன்னியாகுமரியைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் மட்டுமே சென்றார். இதற்கு பாஜகவினர் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று முதலமைச்சர் குடியரசுத் தலைவரை அவமதித்து விட்டதாக மேடையில் பேசியுள்ளார் வி.பி.துரைசாமி.












Click it and Unblock the Notifications