அல்லு அர்ஜுன் கைது நியாயமே இல்லை.. சென்னையில் 5 பேர் பலியானதுக்கு யார் பொறுப்பு? சரத்குமார் கேள்வி
சென்னை: "சென்னை விமானப்படை சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்தார்கள். அப்போது யாரை கைது செய்தீர்கள்?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார் பாஜகவைச் சேர்ந்த நடிகர் சரத்குமார். முன்னாள் ஆளுநர் தமிழிசை இதுகுறித்துப் பேசி இருந்த நிலையில் தற்போது சரத்குமாரும் இவ்வாறு கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு அனைத்து சமுதாய மக்களுடன் சேர்ந்து கேக் வெட்டினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், "ஒரு விழாவில் கூட்டம் வரும் என போலீசாருக்கு தெரியும். நடிகர் அல்லு அர்ஜூன் தியேட்டர் செல்வதற்கு முன், போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தர முடியாது என்று கூறியிருக்கலாம். அப்படி செய்யாமல் விட்ட பிறகு அளவுக்கு அடங்காமல், கூட்டம் வந்ததற்கு, அல்லு அர்ஜூன் எப்படி பொறுப்பேற்பார்? அவரை கைது செய்ததில் எந்த வித நியாயமும் கிடையாது. சென்னை விமானப்படை சாகசம் நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்தார்கள். அப்போது யாரை கைது செய்தீர்கள்?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
'புஷ்பா 2' படத்தின் சிறப்பு காட்சியின் போது கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி பெண் ஒருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் பெயரும் இடம்பெற்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து இடைக்கால ஜாமீன் கிடைத்த நிலையில் நேற்று காலை அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டது விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. விமானப்படை தொடங்கப்பட்டு 92வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்திய விமானப்படை சார்பாக வான் சாகச நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியைக் காண 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடினர். கடும் வெப்பத்தாலும், கூட்ட நெரிசலாலும் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான வான்வழி சாகச நிகழ்ச்சியை காண வந்த லட்சக்கணக்கான நபர்களில் 5 பேர் கடும் வெப்பத்தால் நீர்ச்சத்து குறைந்து உடல்நலம் பாதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்யாததே உயிர் பலிக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்தச் சூழலில் அல்லு அர்ஜூன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை மெரினா வான் சாகச நிகழ்வின்போது 5 பேர் பலியானதற்கு யார் மீது நடவடிக்கை எடுப்பது? ஆட்சியாளர்கள் மீதா எனக் கேள்வி எழுப்பி இருந்தார். பாஜகவை சேர்ந்த சரத்குமாரும் அதே கேள்வியை எழுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications