அது தமிழ்நாட்டுக்கே கருப்பு தினம்! 2015 ஐ நினைவுகூர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - என்ன நடந்தது?
சென்னை: ஆந்திராவில் செம்மரங்களை வெட்டியதாக கூறி கடந்த 2015 ஆம் ஆண்டு அம்மாநில போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு என்றும் உதவும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்து உள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீவாரிமெட்டு, சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் செம்மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சென்ற ஆந்திர மாநில சிறப்புப்பிரிவு போலீசார் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 20 பேர் கொல்லப்பட்டனர். செம்மரம் வெட்டியவர்களை கைது செய்ய சென்றபோது அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஆந்திர போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அவர்களில் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டகிரி, கண்ணமங்கலம், நந்தியம்பட்டு கிராமங்களை சேர்ந்தவர்கள். மீதம் உள்ள 8 பேர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள். இவர்கள் இறந்த நிலையில் செம்மரக் கட்டைகளுடன் கிடக்கும் படங்கள் அப்போது வெளியாகி காண்போர் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்த கோர சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் அதுகுறித்து பதிவிட்டு உள்ளார். அவர் தனது பதிவில் "ஆந்திராவில் கடந்த 2015 ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தமிழ்நாட்டுக்கே கருப்பு தினமாகும். என் மனம் அவர்களின் குடும்பங்களையே நினைக்கிறது. நீதிக்காக அவர்களின் குடும்பத்தினர் நடத்தி வரும் சட்டப் போராட்டத்தில் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும். அவர்களுக்கு தேவையான மற்ற அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்." என உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications