”நீங்க என்னை சிஎம் ஆக்குனாத்தான் கிராமத்தில் தரிசனம் தருவேன்..” விஜய்யை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: "நீங்க என்னை சி.எம். ஆக்குனாத்தான் கிராமத்தில் தரிசனம் தருவேன்" என ப்ளூ சட்டை மாறன் விஜய்யை விமர்சனம் செய்துள்ளார். விஜய் இன்று வேலூரில் பேசும்போது, உங்க எல்லாரையும் நீங்கள் இருக்கும் உங்க ஊரில் வந்தே சந்திக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.. தவெக ஆட்சி அமைந்ததும் உங்க அனைவரையும் கிராமத்திற்கே வந்து சந்திப்பேன் என வாக்குறுதி கொடுத்தார். இதனை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் இன்று வேலூரில் பிரசாரம் மேற்கொண்டார். வேலூரை அடுத்த அகரம்சேரியி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய விஜய் குட்டி கதை சொல்லி பேசினார். மேலும் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். விஜய் பேசியதாவது:-

டிவிகே ஆட்சி அமைந்ததும்
"மக்களை நேசிக்கிற ஒரு நல்ல தலைமை இல்லாததால் இத்தனை வருடமாக வேறு வழி இல்லாமல் ஸ்டாலின் சார் கொடுத்த அந்த பொய்யான வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நம்பி ஏமாந்த நம்ம மக்களுக்கு சரியான நேரத்தில் ஒரு வெகுஜன மக்களுக்காக வந்தது தான் நம்ம டிவிகே. இப்போ நாம் ஒவ்வொரு வீட்டிலும் உயிராக உணர்வாக இருக்கிறோம். நான் வந்து உங்கள் எல்லோரையும் நேரில் சந்திக்க வேண்டும்.
நீங்கள் இருக்கும் உங்க ஊரில் வந்தே சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது மனதில் பெரிய ஆசை. ஆனால் இந்த நேரத்தில் நமக்கு எதிராக என்னென்ன சூழ்ச்சிகள் நடக்கிறது என்பது உங்க எல்லாருக்கும் தெரியும். இந்த நேரத்தில் உங்க எல்லாருக்கும் ஒரு வாக்குறுதி தருகிறேன். நமது டிவிகே ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்துக்கும் நான் நேரடியாக வந்து என்னுடைய சொந்தங்கள் ஆகிய உங்கள் எல்லோரையும் நான் சந்திக்கிறேன். ஒவ்வொரு கிராமமாக வந்து சந்திப்பேன்.." என்று கூறினார்.
விஜய் மீது விமர்சனம்
டிவிகே ஆட்சி அமைந்த பிறகு மக்களை சந்திப்பதாக கூறியுள்ள விஜய்க்கு பலரும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே கரூர் சம்பவத்தின் போது கூட களத்தில் நிற்காமல் ஓடியவர் என்றும், பின்னர் கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் வந்து சந்திக்காமல் பனையூருக்கு அழைத்து வந்து சந்தித்தது, தூய்மை பணியாளர்களையும் பனையூருக்கு வர வைத்து அவர்கள் குறைகளை கேட்டதையும் விமர்சிக்கப்பட்டு வந்தது.
நீங்க என்னை சி.எம். ஆக்குனாத்தான்
இந்த நிலையில் மீண்டும் விஜய் அதனை நியாயப்படுத்துவது போலவே ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை சந்திக்கிறேன் என மறைமுகமாக கூறியிருப்பதையும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். "நீங்க என்னை சி.எம். ஆக்குனாத்தான் கிராமத்தில் தரிசனம் தருவேன்" என ப்ளூ சட்டை மாறன் விஜய்யை விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
"கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து.. களப்பணி செய்து ஆட்சியை பிடிப்பது பழைய பாணி. நீங்க என்னை சி.எம். ஆக்குனாத்தான் கிராமத்தில் தரிசனம் தருவேன். அதுவரை நகரங்களில் மட்டுமே என்னை காண முடியும்" என்று கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், "உங்க கட்சில முக்கிய பொறுப்புல இருக்கற ஆதவ், புஸ்ஸி, ஜான், ராஜ்மோகர், அருண்.. எல்லாமே ஆம்பளைங்க! ஏன் திறமையான பெண்கள் கண்ணுக்கு தெரியாதா? சீமான் மாதிரி.. பாதிக்கு பாதி பெண் வேட்பாளர்களை நியமிக்க முடியுமா? அதை மொதல்ல செய்யுங்க" என்று பதிவிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் மாநிலம்
விஜய் இன்று பேசும்போது, "ஆட்சியில் இன்றைக்கு ஒன்றுக்கும் உதவாத இந்த உல்டா மாடல் ஆட்சியில் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம் இல்லை. சூப்பர் ஸ்டாண்ட் அப் காமெடி காரர் நடத்துகிற மாநிலமாக மாறி விட்டது என்றும், காமராஜர் ஆட்சி செய்த போது தமிழகம் சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருந்தது.. அண்ணா ஆட்சி செய்த போது தமிழகம் சூப்பர் ஸ்டார் மாநிலம்.. எம்ஜிஆர் ஆட்சி செய்த போது சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருந்தது என்று கூறியிருந்தார். இதனையும் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், "காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆட்சிகளில் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருந்தது என்ற விஜய்.. ஜெயலலிதா ஆட்சி.. சிறந்த ஆட்சின்னு அன்னைக்கி கைய கட்டி பவ்யமா பேசிட்டு.. இப்ப அவங்க பேரை சொல்லாம விட்டுட்டாரு" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications