அஜித் குமார் மீது புகார் தந்த அந்த பெண் யார்? CCTV காட்சி.. புயலை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: திருபுவனம் அஜித் குமார் வழக்கு தொடர்பாக விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார். முக்கியமாக புகார் தந்த பெண் ஏன் இதுவரை விசாரணைக்கு உள்ளாக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
நேற்று திருபுவனம் அஜித் குமார் வழக்கில், நீதிபதிகள் தமிழக அரசுக்கும் , போலீசாருக்கும் சரமாரி கேள்விகளை எழுப்பினர். அதில், அஜித் குமார் கொலை வழக்கை உணர்வுப் பூர்வமாக எடுத்து, சிபிசிஐடியின் சிறப்புக் குழு நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும். காரணமான உயரதிகாரிகள் முதல் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அஜித் குமார் உடலின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது. உடலில் ஒரு பாகத்தையும் விடாமல் தாக்கப்பட்டுள்ளார். பதவி ஆணவத்தில் காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அஜித் குமார் இறக்கும் வரை, அவர் எதற்காக விசாரிக்கப்பட்டார் என்பதற்கு FIR பதிவு செய்யப்படவில்லை.

அஜித் குமார் காவலர்களால் தாக்கப்படும் வீடியோ காட்சியை எடுத்தவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கிறார் வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது? யார் அங்கு இருந்தனர்?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசு தரப்பு, அஜித் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது என்று கூறியது. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கியது உயர் நீதிமன்றம்.
ப்ளூ சட்டை மாறன் கேள்வி
திருபுவனம் அஜித் குமார் வழக்கு தொடர்பாக விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில், * திருபுவனம் அஜித்குமார் வழக்கில் நகை காணாமல் போனதாக புகார் அளித்த பெண்மணி மற்றும் அவரது பின்னணி தகவல்கள் ஏன் மீடியா வெளிச்சத்திற்கு பெரிதாக வரவில்லை?
* சாதாரண நகை காணாமல் போன விஷயத்திற்கு ஒரு இளைஞரை கடும் சித்ரவதை செய்து கொல்லும் அளவிற்கு போனது ஏன்? பின்னணி என்ன?
* அனைத்து காவல் நிலையங்களுக்கு உள்ளேயும் CCTV பொருத்தப்பட வேண்டுமென பல ஆண்டுகளாக கூறப்படுகிறதே? அது நடைமுறையில் உள்ளதா?
* புகார் அளிக்க வருவது மற்றும் சந்தேகத்தின் பெயரில் விசாரணை செய்வது என அனைத்தும் CCTV யில்பதிவு செய்யப்பட வேண்டுமென சட்டம் இயற்றப்பட்டுள்ளதா?
* முக்கியமான வழக்குகளில் மட்டும் எப்படி CCTV க்கள் வேலை செய்யாமல் போகின்றன?
* அனைத்து காவல் நிலையங்களுக்கு உள்ளேயும் CCTV பொருத்தப்பட வேண்டும். அவை வேலை செய்யாவிட்டால் அதற்கு காவல் அதிகாரிகளே பொறுப்பு என அரசு உத்தரவு பிறப்பிக்கலாமே.
* விசாரணை என்கிற பெயரில் சாமான்ய மனிதர்களை இப்படி அடித்து துன்புறுத்துவதற்கு எதிராக நீதிமன்றம் நிரந்தர தீர்வை உத்தரவாக பிறப்பிக்க வேண்டும்
* எந்த குற்ற பின்னணியும் இல்லாத அஜித்குமாருக்கு இப்படி ஒரு கொடூரம் நிகழ்வது.. எளிய மக்களுக்கு காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் மீதான கோபத்தையும், அச்சத்தையும், வெறுப்பையும் மேலும் அதிகரிக்கவே செய்யும்.
* உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு பல லட்சம் உதவி, அரசு வேலை, சிபிஐ விசாரணை என்பதெல்லாம் சரி.
* ஆனால் இனி பொதுமக்களை இப்படி இஷ்டத்திற்கு அடித்து துன்புறுத்தாமல்.. ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க காவல்துறைக்கு கடுமையான விதிகளை உருவாக்காவிட்டால்... இத்தகைய செயல்கள் நடப்பதை தடுக்க இயலாது., என்று விமர்சனம் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications