ஒரு மெசேஜ் தான்.. பல கோடிகளை இழக்கும் விமான நிறுவனங்கள்.. வெடிகுண்டு புரளிகளால் இத்தனை பாதிப்புகளா?
சென்னை: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 54 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் புரளி என்றாலும், இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால் பயணிகள் மட்டும் இன்றி விமான நிறுவனங்களும் பல கோடி இழப்பை எதிர்கொள்கின்றன. அப்படி வெடிகுண்டு மிரட்டலால் விமான நிறுவனங்கள் எவ்வளவு ரூபாய் இழந்துள்ளன என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
சமீப காலமாக விமானங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதை காண முடிகிறது. இந்த வெடிகுண்டு மிரட்டல்களால் விமானங்கள் அவசர அவசரமாக திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்படுகின்றன. சோதித்து பார்த்தால் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் வெறும் புரளி என்பது தெரிய வருகிறது. விமானங்களுக்கு விடுக்கப்படும் இந்த போலி மிரட்டல்களால் பெருமளவு செலவும் ஆகிறது. இது குறித்து பார்க்கலாம்.

அண்மையில், நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 777 விமானம் 130 டன் எரிபொருளுடன் சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட 2 மணி நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போயிங் 777 விமானம் அதிகபட்சமாக 250 டன் எடையுடன் தரையிறங்கும் திறன் கொண்டது. இந்த விமானங்களின் பயணிகள் மற்றும் அவர்களின் லக்கேஜ்கள், சரக்குகள் என அனைத்தும் சேர்த்து 340 - 350 டன்கள் எடை கொண்டதாக இருக்கும்.
புறப்படும் போது இந்த எடையுடன் புறப்படும். ஆனால், தரையிறங்கும் போது இதே வெயிட் உடன் தரையிறங்க உடியாது. புறப்பட்ட இரண்டு மணி நேரத்தில் நியூயார்க் சென்ற விமானம் எமெர்ஜென்சி லேண்டிங் ஆக வேண்டியிருந்ததால், 100 டன் எடைக் கொண்ட எரிபொருளை வீணாக கொட்ட வேண்டியிருக்கும். 1 டன் எடை கொண்ட எரிபொருளின் விலை சுமார் ஒரு லட்சமாக உள்ளது.
எனவே, எரிபொருளை வீணாக்குவதன் மூலம் சுமார் 1 கோடி வரையில் விமான நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று சீனியர் பைலட் ஒருவர் கூறியுள்ளார். அதேபோல, கடந்த 15 ஆம் தேதி டெல்லியில் இருந்து சிகாகோ புறப்பட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த விமானம் கனடாவில் உள்ள இகாலியுட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இதனால், விமானத்தில் பயணம் செய்த 200 பயணிகளும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் தவிப்புக்கு உள்ளாகினர். கனடா ஏர் போர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ 330 விமானத்திற்கு சொந்தமான விமானம் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கான செலவுகளையும் விமான நிறுவனங்களே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஒருநாள் வாடகையாக இந்திய மதிப்பில் ரூ.14 லட்சம் ஏர் இந்தியா செலுத்தியிருக்க வேண்டும் என்று விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன.
எனவே இத்தகைய அச்சுறுத்தல்களால் விமான நிறுவனங்களுக்கு கடுமையான நிதி இழப்பும் ஏற்படுகிறதாம். இது ஒரு நிதி பயங்கரவாதம் என்று விமானத்துறை நிபுணர்கள் சொல்கிறார்கள். அதுவும் பண்டிகை காலங்களில் இதுபோன்ற மிரட்டல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்படுவது விமான நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இது மட்டும் இன்றி பல பயணிகள் கனெக்டிங் விமானம் மூலமாக வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும்.
ஆனால், விமானங்கள் பயண இலக்குக்கு செல்லாமல் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்படுவதால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கும் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், இப்படி விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவதோடு.. விமானங்களில் பறக்க தடை விதிக்கும் வகையில் விதிகளை மாற்ற ஆலோசிப்பதாக விமான போக்குவரத்து துறை தரப்பில் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications